ஆஸ்திரேலியாவுக்கு அப்போ தெரியாது; மார்ச் 14 வரலாற்றில் இடம்பிடிக்கப்போதுகுனு! வரலாறு படைத்த டிராவிட்-லட்சுமணன்

By karthikeyan VFirst Published Mar 14, 2020, 2:06 PM IST
Highlights

ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 384 ரன்களை நிர்ணயித்து, அந்த போட்டியில் 171 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியும் பெற்ற அதிசயம் 2001ம் ஆண்டு நடந்தது. 
 

முதல் இன்னிங்ஸ் முடிவில் ஃபாலோ ஆன் பெற்ற இந்திய அணி, அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் டிராவிட் - லட்சுமணனின் வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸால் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த அந்த போட்டியில், டிராவிட்டும் லட்சுமணனும் இணைந்து ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த தினம் இன்று தான்.

ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2001ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து கொல்கத்தாவில் மார்ச் 11ம் தேதி தொடங்கி, நடந்த இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களை குவித்தது. ஆனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. 

இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடக்க வீரர்கள் தாஸ், சடகோபன் ரமேஷ், சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஆகிய நால்வரும் 232 ரன்களுக்குள்ளாக ஆட்டமிழந்துவிட்டனர். ஆனால் லட்சுமணன் மட்டும் ஒருமுனையில் நிலைத்து ஆடி சதமடித்தார். மூன்றாம் நாள்(மார்ச் 13) ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்திருந்தது. லட்சுமணன் 109 ரன்களுடனும் டிராவிட் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

நான்காம் நாள்(மார்ச் 14) ஆட்டத்தை டிராவிட்டும் லட்சுமணனும் தொடர்ந்தனர். அந்த நாள் தொடங்கும்போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தெரிந்திருக்காது, இந்த நாள் வரலாற்றில் இடம்பெறப்போகிறது என்று... ஆம்.. நான்காம் நாள் முழுவதும் பேட்டிங் ஆடி, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து மெகா ஸ்கோரை எட்ட, டிராவிட்டும் லட்சுமனனும் உதவினர். அந்த நாள் முழுவதும் ஆடிய டிராவிட்டும் லட்சுமணனும் இணைந்து 90 ஓவரில் விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல் 335 ரன்களை குவித்தனர்.

அபாரமாக ஆடி இரட்டை சதமடித்த லட்சுமணன் 281 ரன்களையும் ராகுல் டிராவிட் 180 ரன்களையும் குவித்தனர். இவர்களின் அபாரமான பேட்டிங்கால் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 657 ரன்களை குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 384 ரன்களை நிர்ணயித்தது இந்திய அணி. ஆனால் 212 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் எடுக்க முடிந்ததால் இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னையில் நடந்த மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியது. 

Also Read - நமக்கு வேற சாய்ஸே இல்ல.. ஐபிஎல் குறித்து மௌனம் கலைத்த கங்குலி

லட்சுமணன் - டிராவிட்டின் அந்த பார்ட்னர்ஷிப் தான் இன்றுவரை இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக பார்க்கப்படுகிறது. அவர்கள் இருவரும் இணைந்து ஒருநாள் முழுதும் ஆடிய தினம் இதே மார்ச் 14 தான்...

Also Read - பிசிசிஐ வர்ணனையாளர் குழுவிலிருந்து தூக்கியெறியப்பட்ட சஞ்சய்(சர்ச்சை) மஞ்சரேக்கர்
 

click me!