NZ vs IND: 3வது டி20யில் குறுக்கிட்ட மழை.. டி.எல்.எஸ் முறைப்படி ஆட்டம் டை..! டி20 தொடரை வென்றது இந்தியா

By karthikeyan VFirst Published Nov 22, 2022, 4:37 PM IST
Highlights

இந்தியா  - நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால் டி.எல்.எஸ் முறைப்படி ஆட்டம் டை ஆனது. எனவே இந்திய அணி 1-0 என டி20 தொடரை வென்றது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நேப்பியரில் நடந்தது. 

மழையால் ஆட்டம் தாமதமாகத்தான் தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடாததால் டிம் சௌதி கேப்டன்சி செய்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

இந்திய அணி:

ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

NZ vs IND: சூர்யகுமார் யாதவை வீழ்த்துவது எப்படி..? ரோஸ் டெய்லர் வகுத்து கொடுத்த செம வியூகம்

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி (கேப்டன்), ஆடம் மில்னே, இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன்.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் 3 ரன்களுக்கும், வில்லியம்சனுக்கு மாற்று வீரராக களமிறங்கிய மார்க் சாப்மேன் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு டெவான் கான்வே மற்றும் க்ளென் ஃபிலிப்ஸ் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 3வது விக்கெட்டுக்கு 10 ஓவரில் 86 ரன்களை குவித்தனர்.

நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 15.5 ஓவரில் 130 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஃபிலிப்ஸ் 54 ரன்களுக்கு சிராஜின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, கான்வேவை 59 ரன்களுக்கு அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். 16 ஓவரில் 130 ரன்கள் அடித்திருந்த நியூசிலாந்து அணிக்கு கடைசி 4 ஓவரில் வெறும் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து கடைசி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இந்திய அணி. 16வது ஓவரில் ஃபிலிப்ஸை வீழ்த்திய சிராஜ், 18வது ஓவரில் நீஷம் மற்றும் சாண்ட்னெர் ஆகிய இருவரையும் வீழ்த்த, கான்வே மற்றும் டேரைல் மிட்செலை அர்ஷ்தீப் சிங் வீழ்த்த, 19.4 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி. 16வது ஓவரில் 3வது விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணி, அடுத்த 4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் டெத் ஓவர்களை அபாரமாக வீசினர். இருவரும் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

161 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் (10), ரிஷப் பண்ட்(11) ஆகிய இருவரும் இந்த போட்டியிலும் ஏமாற்றமளிக்க, சூர்யகுமார் யாதவ் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் ரன்னே அடிக்காமல் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.

ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 18 பந்தில் 30 ரன்களும், தீபக் ஹூடா 9 ரன்களும் அடித்து களத்தில் இருக்க, இந்திய அணி 9 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் அடித்திருக்க மழை பெய்தது. அதன்பின்னர் மழை நிற்காததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு டி.எல்.எஸ் முறைப்படி ஆட்டம் டை என அறிவிக்கப்பட்டது. இதே 9 ஓவரில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் அடித்திருந்தது. இந்திய அணி கூடுதலாக 2 விக்கெட்டை இழந்திருந்தாலும், 13 ரன்கள் அதிகமாக அடித்திருந்ததால் ஆட்டம் டை ஆனது.

முறியடிக்கவே முடியாதுனு நெனச்ச ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் சாதனையை முறியடித்த தமிழன் ஜெகதீசன்..!

எனவே இந்திய அணி 1-0 என டி20 தொடரை வென்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை சூர்யகுமார் யாதவ் வென்றார்.

click me!