
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி டி20 போட்டி, பெங்களூருவில் மழை பெய்ததால் கைவிடப்பட்டது. அதனால் டி20 தொடர் 2-2 என சமனடைந்தது. இதுவரை இந்திய மண்ணில் டி20 தொடரில் தோற்றதில்லை என்ற சாதனையை தக்கவைத்தது தென்னாப்பிரிக்க அணி.
கடைசி போட்டி மழையால் தாமதமானபோது, இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட்டில் அமர்ந்திருந்தார். அப்போது மைதான ஊழியர் ஒருவர் மிகுந்த ஆர்வத்துடன் ருதுராஜுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முனைந்தார். அப்போது மைதான ஊழியரின் உடல் ருதுராஜ் மீது உரசியது. உடனடியாக கையை வைத்து அந்த மைதான ஊழியரை தள்ளிவிட்ட ருதுராஜ், உரசாமல் தள்ளி அமருமாறு செய்கை காட்டியதுடன், செல்ஃபிக்கு சரியாக ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை.
வளர்ந்துவரும் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டின் செயல் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவு பெரிய ஜாம்பவான் வீரராக வளர்ந்தாலும் தன்னடக்கமும், அனைவரையும் சமமாக மதிக்கும் பண்பும் இருந்தால் தான், நற்பெயரை தக்கவைத்துக்கொள்ள முடியும். ஆனால் இன்னும் வளரவே இல்லாத ருதுராஜின் இந்த செயல் அதிருப்திக்குரியது.
ருதுராஜின் செயலை கண்டு ஆத்திரமடைந்த ரசிகர்கள், தோனி, ரோஹித், சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்கள் மைதான ஊழியர்களை கட்டியணைத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் ருதுராஜ், என அறிவுரைகளை வழங்கிவருகின்றனர்.
இந்திய அணியில் வளர்ந்துவரும் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டின் செயல், அவர் மீதான ரசிகர்களின் அன்பு மற்றும் அபிப்ராயத்தை குறைத்துக்கொண்டுள்ளார்.