இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அணியில் எடுக்கப்படாதது குறித்து முகமது ஷமி கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் அஷ்வின் அணியில் எடுக்கப்படவில்லை. அதுவே கடும் விமர்சனத்துக்குள்ளானது. எல்லா கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய சீனியர் ஸ்பின்னரும் மேட்ச் வின்னருமான ரவிச்சந்திரன் அஷ்வினை, கண்டிஷனை கருத்தில்கொள்ளாமல் அனைத்து டெஸ்ட் போட்டியிலும் ஆடவைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் லண்டன் லார்ட்ஸில் நடந்த 2வது டெஸ்ட்டில் கண்டிஷன் மேகமூட்டமாக இருந்ததால் ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பு இருக்காது என்பதால் அஷ்வின் எடுக்கப்படவில்லை.
3வது டெஸ்ட் நடக்கும் லீட்ஸ் ஆடுகளமும் கண்டிஷனும் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அஷ்வினை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறினர். இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர்களே அதைத்தான் தெரிவித்தனர்.
ஆனால் 3வது டெஸ்ட்டிலும் அஷ்வினை எடுக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முகமது ஷமி, அணி தேர்வு குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. அது அணி நிர்வாகத்தின் முடிவு. களத்தில் ஆடும் 11 வீரர்கள் தான் அணியின் வெற்றிக்காக அவர்களது கடமையை செய்ய வேண்டும். அணி நிர்வாகம் தேர்வு செய்து களத்தில் இறக்கிவிட்ட 11 வீரர்கள் மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது அவசியம். எனவே அணி தேர்வு குறித்தெல்லாம் ரொம்ப சிந்திக்கக்கூடாது என்று முகமது ஷமி தெரிவித்தார்.