ஏமாற்றிய ரோஹித்.. அரைசதம் அடித்த அகர்வால்.. புஜாராவும் பொறுப்பான பேட்டிங்

By karthikeyan VFirst Published Oct 10, 2019, 1:23 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்த மயன்க் அகர்வால், புனேவில் நடந்துவரும் இரண்டாவது போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் நிதானமாகவும் பொறுப்பாகவும் ஆடி அரைசதம் அடித்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு அதிரடி மாற்றத்துடன் களமிறங்கியது. ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு, ஃபாஸ்ட் பவுலர் உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர். முதல் போட்டியில் சிறப்பாக ஆடி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ரோஹித் சர்மா, இந்த போட்டியில் அவசரப்பட்டு ஆட்டமிழந்தார். புனே ஆடுகளத்தில் பந்து நல்ல வேகத்தில் நன்றாக பவுன்ஸும் ஆகிறது. எனவே ரபாடாவும் ஃபிளாண்டரும் தொடக்கம் முதலே ரோஹித்தையும் மயன்க் அகர்வாலையும் மிரட்டினர். அவற்றை சமாளித்து ஆடிய ரோஹித், 10வது ஓவரில் ரபாடாவிடம் சிக்கினார். 

ரோஹித் சர்மா 14 ரன்களில் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். மயன்க் அகர்வால் தொடக்கம் முதலே கவனமாகவும் நிதானமாகவும் ஆடினார். புஜாராவும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட்டை இழந்துவிடாமல் தனது இயல்பான ஆட்டத்தை பொறுமையாக தொடங்கினார். 

சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால், முதல் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு பிறகு அரைசதம் கடந்தார். மயன்க் அகர்வால் 60 ரன்களை கடந்தும் புஜாரா 30 ரன்களை கடந்தும் ஆடிவருகின்றனர். இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை கடந்துள்ளது. 
 

click me!