நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடேவில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி, மைதானம் ஈரமாக இருந்ததால் 12 மணிக்குத்தான் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி ஆடுவதால் அஜிங்க்யா ரஹானே அணியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், ஜடேஜாவிற்கு பதிலாக ஜெயந்த் யாதவும், இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக முகமது சிராஜும் சேர்க்கப்பட்டனர்.
மயன்க் அகர்வால் சரியாக ஆடுவதில்லை என்ற கடும் விமர்சனம் அவர் மீது இருந்த நிலையில், இந்த போட்டிக்கு தனக்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்திருந்த அவர், தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினார். அவரும் ஷுப்மன் கில்லும் இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்களை சேர்த்து கொடுத்தனர்.
ஷுப்மன் கில்லை 44 ரன்களுக்கு வீழ்த்திய அஜாஸ் படேல், அவரது அடுத்த ஓவரில் புஜாரா மற்றும் கோலி ஆகிய இருவரையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார். அதன்பின்னர் மயன்க் அகர்வாலுடன் இணைந்து நிதானமாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயரும் 18 ரன்னில் அஜாஸ் படேலின் பந்தில் ஆட்டமிழக்க, இந்திய அணி, 169 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிய மயன்க் அகர்வால் சதமடித்தார். கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த போட்டியில் களமிறங்கிய மயன்க் அகர்வால் அபாரமாக ஆடி சதமடித்து தனது திறமையை மீண்டும் நிரூபித்ததுடன், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடியும் கொடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ரிதிமான் சஹாவும் சிறப்பாக ஆடிவருகிறார்.