கையில வெண்ணெய வச்சுகிட்டு நெய்க்கு அலையுறீங்களேப்பா!! வெளுத்து வாங்கிய கும்ப்ளே

By karthikeyan VFirst Published Mar 15, 2019, 4:36 PM IST
Highlights

இந்திய அணியின் நீண்டகால மற்றும் இன்னும் தீராத சிக்கலான 4ம் வரிசை பேட்ஸ்மேன் பிரச்னைக்கு கும்ப்ளே தீர்வு சொல்லியுள்ளார். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர் என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பரிசோதிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடியதை இந்திய அணி நிர்வாகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. 

ஆனால் அதற்கு ராயுடுவே ஆப்பு வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தில், அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு படுமோசமாக சொதப்பியதும் தன்னம்பிக்கையில்லாமல் ஆடியதும் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றம். 

ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் சரியாக ஆடாதது மட்டுமல்லாமல் அவரது ஃபீல்டிங்கும் சரியில்லை. ராயுடு சொதப்பியதால் இந்திய அணியின் நான்காம் இடம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. 

இந்நிலையில், நான்காம் வரிசைக்கு யாரும் எதிர்பாராத விதமாக புஜாராவின் பெயரை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் கேப்டன் கங்குலி. இவ்வாறு நான்காம் வரிசை சிக்கல் கன்னித்தீவு போல நீண்டு கொண்டிருக்க, வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதையாக இருக்கிறது இந்திய அணியின் நிலை என்கிற ரீதியாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கும்ப்ளே, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால்தான் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போதுவரைக்கும் கூட அவர்களை சார்ந்துதான் இந்திய அணி உள்ளது. என்னை பொறுத்தவரை இந்திய அணியின் சிக்கலாக இருக்கும் 4ம் வரிசைக்கு தோனிதான் தீர்வு. தோனியை நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என்பதே என் கருத்து. தோனியை நான்காம் வரிசையில் இறக்கிவிட்டு 5,6,7ம் வரிசை வீரர்கள் குறித்து சிந்திக்கலாம். தொடர்ந்து மிடில் ஆர்டரை மாற்றிக்கொண்டே இருப்பது, இந்திய அணி இன்னும் அன்செட்டிலாக இருப்பது போலவே வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றுகிறது. 

உலக கோப்பையின் அரையிறுதி அல்லது இறுதி போட்டி என்று வைத்துக்கொள்வோம். முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் சரியாக ஆடாத நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக சிறப்பாக ஆடி அணியை நல்ல நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும். தொடர்ந்து மிடில் ஆர்டர் பேட்டிங்கை மாற்றிக்கொண்டே இருப்பது அணிக்கு நல்லதல்ல. தோனியையே நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று கும்ப்ளே அதிரடியாக தெரிவித்துள்ளார். 
 

click me!