#IPL2021 அவங்க 2 பேருக்கு பந்துவீசுவது தான் ரொம்ப கஷ்டம்..! குல்தீப் யாதவ் ஓபன் டாக்

Published : Apr 20, 2021, 04:18 PM IST
#IPL2021 அவங்க 2 பேருக்கு பந்துவீசுவது தான் ரொம்ப கஷ்டம்..! குல்தீப் யாதவ் ஓபன் டாக்

சுருக்கம்

ஐபிஎல்லில் தான் பந்துவீசியதிலேயே மிகவும் கடினமான 2 பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.  

இந்திய கிரிக்கெட் அணியில் அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடியை ஓரங்கட்டி 2017ம் ஆண்டு இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்களாக உருவெடுத்த குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி இரண்டே ஆண்டுகளில் காணாமல் போய்விட்டது. 2019 உலக கோப்பைக்கு பிறகே இருவரும் சேர்ந்து இந்திய அணியில் இடம்பெறவில்லை.

2017 மற்றும் 2018 ஆகிய 2 ஆண்டுகள் கோலோச்சிய இவர்கள், அதன்பின்னர் சோடைபோனார்கள். ஐபிஎல்லிலும் அதே நிலைதான். ஐபிஎல்லில் சாஹலாவது தாக்குப்பிடிக்கிறார். குல்தீப் யாதவால் முடியவில்லை.

கேகேஆர் அணியில் ஆடிய குல்தீப் யாதவ், 2017 ஐபிஎல்லில் 12 விக்கெட்டுகளையும், 2018 ஐபிஎல்லில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில், 2019 ஐபிஎல்லில் அவரது பவுலிங்கை எதிரணி வீரர்கள் அடித்து நொறுக்கினர். அதன்விளைவாக அந்த சீசனின் பாதியில் ஆடும் லெவனில் இடம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட குல்தீப்பிற்கு கடந்த சீசனிலும் பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த சீசனில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய குல்தீப்பை இந்த சீசனின் ஏலத்திற்கு முன்பாக கேகேஆர் அணி கழட்டிவிட்டது.

ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்திலும் குல்தீப்பை எடுக்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குல்தீப்பை ஏலத்தில் எடுத்தது. ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்து வைத்ததே தவிர, இந்த சீசனில் இதுவரை ஆடிய 3 போட்டிகளில் ஒன்றில் கூட ஆடும் லெவனில் இறக்கவில்லை. ஆனாலும் இந்த சீசனில் தனக்கு கண்டிப்பாக ஆட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் குல்தீப் யாதவ்.

இதுகுறித்து பேசிய குல்தீப் யாதவ், இந்த சீசனில் வெறும் 3 போட்டிகள் தான் முடிந்துள்ளன. ஆடும் லெவனில் எனக்கான இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக சிறப்பாக ஆடுவேன் என்று தெரிவித்த குல்தீப், ஐபிஎல்லில் தான் பந்துவீசியதில் கடினமான பேட்ஸ்மேன்கள் யார் யார் என்றும் தெரிவித்தார். 

அதுகுறித்து பேசிய குல்தீப், ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் வீசுவதும் கடினம். டிவில்லியர்ஸ் மைதானத்தின் எந்த பகுதியிலும் பந்தை அடிக்கும் திறன் பெற்றவர். ரோஹித் சர்மாவிற்கு பந்தை எதிர்கொள்ள நிறைய நேரம் கிடைக்கும். அதனால் அபாரமாக ஆடுவார். எனவே இவர்கள் இருவருக்கும் வீசுவதுதான் கடினம் என்று குல்தீப் யாதவ் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஜோராக தொடங்கும் டி20 உலகக்கோப்பை... அமெரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா - பிளேயிங் லெவன் இதோ
கிரிக்கெட் உலகை அதிரவைத்த வைபவ் சூர்யவன்ஷி! 175 ரன்கள், 15 சிக்ஸர்கள்.. இளம் வயதில் முறியடிக்கப்பட்ட 5 மெகா சாதனைகள்!