ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவரில் வெறும் 133 ரன்கள் மட்டுமே அடித்து, 134 ரன்கள் என்ற எளிய இலக்கை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே 2வது வெற்றியை எதிர்நோக்கி இந்த போட்டியில் மோதும் நிலையில், மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் - நிதிஷ் ராணா ஆகிய இருவரும் மந்தமாக தொடங்கினர். ஷுப்மன் கில் 19 பந்தில் 11 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, ராணாவும் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக அடித்து ஆடிய திரிபாதி, கேப்டன் மோர்கன் ரன் அவுட்டாக காரணமாகிவிட்டார். ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளாமல் மோர்கன் ரன் அவுட்டாகி வெளியேற, அதிரடியாக ஆடி நம்பிக்கையளித்த திரிபாதி 36 ரன்னிலும், டெத் ஓவரில் வெளுத்துக்கட்டுவார் என நம்பப்பட்ட தினேஷ் கார்த்திக் 18வது ஓவரில் 25 ரன்னிலும் ஆட்டமிழக்க, இதற்கிடையே ரசலும் வெறும் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேகேஆர் அணியின் அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் அந்த அணி வெறும் 133 ரன்கள் மட்டுமே அடித்து, 134 ரன்கள் என்ற எளிய இலக்கை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்துள்ளது கேகேஆர் அணி. அபாரமாக பந்துவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.