அந்த 2 அணியையும் யாருமே கண்டுக்கல.. ஆனால் உலக கோப்பையில் அந்த 2 டீம்தான் செம சர்ப்ரைஸ் கொடுக்க போறாங்க

By karthikeyan VFirst Published May 9, 2019, 5:13 PM IST
Highlights

உலக கோப்பையில் சர்ப்ரைஸ் கொடுக்க உள்ள இரண்டு அணிகள் எவையென்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆருடம் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையில் ஆடும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது.

அதேபோல இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இயன் மோர்கன், ஜேசன் ராய், பட்லர், பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என அந்த அணி நல்ல பலம் வாய்ந்த சிறப்பான அணியாக இருப்பதுடன் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். அதனால் உலக கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கான வாய்ப்புகள் தான் பிரகாசமாக இருப்பதாக பல முன்னாள் ஜாம்பவான்கள் பார்க்கின்றனர்.

ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியிருப்பதால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை மீண்டும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் சிறந்த அணிகள் தான். 

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே சிறந்த அணியாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்பை தெரிவித்துவருகின்றனர். இந்திய அணிக்கு முதல் உலக கோப்பையை வென்றுகொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவும் உலக கோப்பையில் எந்தெந்த அணிகள் ஆதிக்கம் செலுத்தும் என கருத்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை குறித்து பேசிய கபில் தேவ், இந்திய அணி இளமையும் அனுபவமும் கலந்த நல்ல அணியாக உள்ளது. இந்திய அணி அரையிறுதிக்கு செல்வது உறுதி. ஆனால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று சொல்வது கடினம். ஏனென்றால் அணியின் அடிப்படையில் மட்டுமே சொல்ல முடியாது. போட்டியில் ஆடும் அந்த நாளில் நம்பிக்கையுடன் இருப்பதும் சிறப்பாக ஆடுவதுமே வெற்றிக்கு வழிவகுக்கும்.

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி. எஞ்சிய ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். அதுமட்டுமல்லாமல் இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு அணிகளும் சர்ப்ரைஸ் கொடுக்கும் என கபில் தேவ் தெரிவித்துள்ளார். 
 

click me!