நான் அப்பவே அழுகல.. ஆனால் இப்ப அழுக வச்சுடாதீங்க.. கேன் வில்லியம்சன் உருக்கம்

By karthikeyan VFirst Published Oct 15, 2019, 12:46 PM IST
Highlights

2019 உலக கோப்பை இறுதி போட்டியை போன்ற பரபரப்பான மற்றும் மனதை கசக்கி பிழிந்த ஒரு போட்டியை இனிமேல் பார்க்கமுடியுமா என்பதே சந்தேகம்தான். 
 

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அந்த இறுதி போட்டியை பார்த்தவர்களுக்கு செம த்ரில்லர் மூவி பார்த்ததைவிட மிகச்சிறந்த அனுபவம் கிடைத்திருக்கும். அந்தளவிற்கு ரசிகர்களை சீட் நுனியில் உட்காரவைத்த பரபரப்பான போட்டி அது. 

2019 உலக கோப்பையை இங்கிலாந்து அணி தான் வெல்லும் என கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பெரும்பாலானோர் எதிர்பார்த்தனர். அதனால் இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடினாலும் அது பெரிய ஆச்சரியமாக இல்லை. சொல்லப்போனால், அந்த அணி மீது இருந்த எதிர்பார்ப்பு அளவிற்கு அந்த அணி ஆடவில்லை என்றாலும் நன்றாக ஆடியது. ஆனால் நியூசிலாந்து அணி மீது பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. கேன் வில்லியம்சனின் அபாரமான கேப்டன்சி, சாமர்த்தியமான சாதுர்யமான நகர்வுகள், நுணுக்கமான கேப்டன்சி ஆகியவற்றால்தான், அந்த அணி ஒரு அணியாக ஒருங்கிணைந்து பல வலுவான அணிகளை வீழ்த்தி இறுதி போட்டிவரை வந்து, இறுதி போட்டியிலும் அசத்தியது. 

ஆனால் கடைசியில் போட்டியும் டை ஆகி, சூப்பர் ஓவரும் டை ஆனதால், பவுண்டரிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முடிவு தீர்மானிக்கப்பட்டதால், வெறும் 7 பவுண்டரிகள் இங்கிலாந்து அணியை விட நியூசிலாந்து அணி பின் தங்கியிருந்ததால் கோப்பையை இழந்தது. போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் கிரிக்கெட் உலகிற்கே பெரும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. ஏனெனில் நியூசிலாந்து அணியும் கோப்பைக்கு தகுதியான அணி. 

இரு அணிகளுமே அபாரமாக ஆடி கடுமையாக போராடின. ஆனால் சூப்பர் ஓவரும் டை ஆனதால், ஐசிசி விதிப்படி, அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றது. நியூசிலாந்து அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும், அந்த அணி தோற்கவில்லை என்பதுதான் உண்மை. ஐசிசி விதிப்படி இங்கிலாந்து உலக கோப்பையை வென்றிருந்தாலும், தார்மீக அடிப்படையில் அந்த கோப்பை இரு அணிகளுக்குமே சொந்தம்தான். 

முதல் உலக கோப்பையை வெல்லும் கனவுடன் இறுதி வரை போராடி, தோற்காதபோதிலும் கோப்பையை இழந்த நியூசிலாந்து அணி உடைந்து நொறுங்கியது. ஆனாலும் அந்த தருணத்தில் கூட நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் தனது வருத்தத்தை பெரியளவில் வெளியே காட்டிக்கொள்ளவோ அழுகவோவெல்லாம் கிடையாது. 

அவர் அழுகவில்லை என்றாலும், எல்லை கடந்து உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கண்கள் கலங்கின. இந்நிலையில், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக விழாவில் கலந்துகொண்ட வில்லியம்சனிடம், உலக கோப்பை தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

உலக கோப்பையை இழந்தது குறித்து பேசிய வில்லியம்சன், அப்படியொரு தருணத்தில் நமக்கு இரண்டு வாய்ப்பு இருக்கிறது. ஒன்று சிரிக்க வேண்டும் அல்லது அழுக வேண்டும். நான் அந்தநேரத்தில் அழுகவில்லை என்பது என்பது மகிழ்ச்சி. ஆனால் இப்போது என்னை அழுகவைத்து விடாதீர்கள். ஆனால் அந்த போட்டியின் முடிவை தீர்மானித்தது மாதிரி, இனிமேல் எந்த போட்டியின் முடிவையும் தீர்மானித்துவிடக்கூடாது என்று உருக்கமாக தெரிவித்தார். 

வில்லியம்சன் அண்மையில் இவ்வாறு பேசியிருந்த நிலையில், ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் சூப்பர் ஓவரும் டை ஆனால், பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவை தீர்மானிக்கும் விதி ரத்து செய்யப்பட்டது. போட்டியின் முடிவு தீர்மானமாகும் வரை, சூப்பர் ஓவர் வீசப்படும் என்று ஐசிசி விதியை மாற்றியமைத்துள்ளது. 
 

click me!