#IPL2021 பாதி சீசனில் வந்துருவாருனு ராஜஸ்தான் அணி நம்பிய நட்சத்திர வீரரும் ஐபிஎல்லில் இருந்து விலகல்..!

By karthikeyan VFirst Published Apr 23, 2021, 10:14 PM IST
Highlights

ஜோஃப்ரா ஆர்ச்சரும் இந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திணறிவருகிறது. முதல் போட்டியில் ஆடிய பென் ஸ்டோக்ஸ், காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு வீரரான லிவிங்ஸ்டன், கொரோனா பாதுகாப்பு வளையத்தை சமாளிக்க முடியாமல் இந்த சீசனிலிருந்து விலகினார்.

கையில் ஏற்பட்ட காயத்தால், ஐபிஎல்லில் முதல் சில போட்டிகளில் ஆர்ச்சர் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இந்த சீசனிலிருந்தே முழுவதுமாக விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அடுத்த வாரம் சசெக்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சி செய்ய உள்ளார். ஒரு வாரம் பயிற்சி செய்வார். பந்துவீசும்போது கையில் வலி இல்லாதபட்சத்தில், அவர் ஆடுவாரா? அப்படி ஆடினால் எந்த தொடரில் ஆடுவார் ஆகியவை அப்டேட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ராஜஸ்தான் அணி ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாமல் திணறிவரும் நிலையில், பாதி சீசனுக்கு பிறகு வந்துவிடுவார் என நம்பப்பட்ட ஆர்ச்சர், சீசனிலிருந்து முழுவதுமாக விலகியது ராஜஸ்தானுக்கு கூடுதல் பின்னடைவாக அமைந்துள்ளது.

ராஜஸ்தான் அணி இந்த சீசனில் இதுவரை ஆடிய முதல் 4 போட்டிகளில் 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!