இவ்வளவு மோசமா தடவுனா யாருக்குதான் கோபம் வராது..? புஜாரா மீது செம கடுப்பாகி திட்டிய ஜடேஜா

By karthikeyan VFirst Published Oct 13, 2019, 3:50 PM IST
Highlights

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முக்கியமான நேரத்தில் முக்கியமான கேட்ச்சை கோட்டைவிட்ட புஜாரா மீது ஜடேஜா செம கடுப்பானார்.
 

புனேவில் கடந்த 10ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 601 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாள் இறுதியில் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டமுடிவில் முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்கான ஸ்கோரைக்கூட தென்னாப்பிரிக்க அணி தவிர்க்காமல் ஆல் அவுட்டானது. இதையடுத்து ஃபாலோ ஆன் பெற்ற தென்னாப்பிரிக்க அணி, நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே இந்திய அணி விக்கெட் வேட்டையை தொடங்கிவிட்டது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே மார்க்ரம் அவுட்டாக, டி ப்ருய்னும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். 

அதன்பின்னர் டுப்ளெசிஸை 5 ரன்களில் அஷ்வின் வெளியேற்றினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த எல்கரையும் 48 ரன்களில் அஷ்வினே வீழ்த்தினார். உணவு இடைவேளைக்கு முன்பாக தென்னாப்பிரிக்க அணி நான்கு விக்கெட்டுகளை இழந்தது. உணவு இடைவேளை முடிந்து வந்ததும், டி காக்கை சோபிக்கவிடாமல் 5 ரன்களில் ஜடேஜா வீழ்த்திய ஜடேஜா, பவுமாவை 38 ரன்களில் வீழ்த்தினார். முத்துசாமியை ஷமி வீழ்த்தினார். 

தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது செசனில் 3 விக்கெட்டுகளை இழந்தது. 129 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணிக்கு, முதல் இன்னிங்ஸை போலவே ஃபிளாண்டரும் மஹாராஜும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை மெது மெதுவாக உயர்த்தியதோடு, விக்கெட்டையும் இழந்துவிடாமல் கவனமாக ஆடினர். 

இந்த ஜோடியை பிரிக்க நீண்ட நேரம் ஆகிக்கொண்டிருந்த நிலையில், ஜடேஜாவின் பந்தில் மஹாராஜ் கொடுத்த கேட்ச்சை இரண்டாவது ஸ்லிப்பில் நின்ற புஜாரா தவறவிட்டார். புஜாராவின் கையில் பட்டு பந்து மிஸ்ஸானதை அடுத்து, காற்றில் இருந்த அந்த பந்தை பிடிக்க புஜாரா மீண்டும் முயற்சி செய்ததால், அவருக்கு தொந்தரவாக இருந்துவிடக்கூடாது என்று ரஹானேவும் கீழே விழுந்துவிட்டார். ஆனால் முயன்றும் புஜாராவால் அதை பிடிக்க முடியவில்லை. ரஹானே, புஜாராவை தடுத்துவிட்டு திடமாக முயன்றிருந்தாலாவது பிடித்திருக்கலாம். ஆனால் அவர் புஜாராவிற்கு குறுக்கே இருந்துவிடக்கூடாது என்பதில்தான் கவனமாக இருந்தார். 

அந்த விக்கெட் தேவைப்பட்ட நேரத்தில் புஜாரா கேட்ச்சை தவறவிட்டதால் ஜடேஜா செம கடுப்பானார். தனது கோபத்தை வெளிப்படையாகவே காட்டி ஏதோ திட்டினார். ஆனாலும் அந்த ஜோடியை அதன்பின்னர் நீண்ட நேரம் நிலைக்கவிடாமல், ஃபிளாண்டரை வீழ்த்திய உமேஷ், அதே ஓவரில் ரபாடாவையும் வீழ்த்தினார். அடுத்த ஓவரிலேயே ஜடேஜா, மஹாராஜை வீழ்த்த, தென்னாப்பிரிக்க அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இப்போதே 2-0 என வென்றுவிட்டது. கடைசி போட்டி மட்டும் மீதமுள்ளது. 
 

click me!