முதல் பந்தை எப்படி போட்டாலும் சிக்ஸர் அடிப்பேன்..! ஓய்வறையில் சொன்னதை செய்துகாட்டிய இஷான் கிஷன்

By karthikeyan VFirst Published Jul 19, 2021, 5:31 PM IST
Highlights

தான் களத்திற்கு செல்லும் முன்பே, முதல் பந்தை எங்கு போட்டாலும் சிக்ஸர் அடிப்பேன் என்று ஓய்வறையில் சொல்லிவிட்டு வந்து, அதேபோல் சிக்ஸர் அடித்ததாக இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.
 

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொழும்பில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 262 ரன்கள் அடிக்க, ஷிகர் தவானின் பொறுப்பான பேட்டிங்(86), பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவின் அதிரடி பேட்டிங், இஷான் கிஷனின் அரைசதத்தால்(59) 37வது ஓவரிலேயே இலக்கை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அறிமுகமாகினர். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தான் ஆடியிருக்க வேண்டியவர். ஆனால் சஞ்சு சாம்சன் காயத்தால் இஷான் கிஷன் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்டார்.

களத்திற்கு வந்த முதல் பந்தே சிக்ஸர் அடித்தது மட்டுமல்லாது, அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். 6வது ஓவரின் 4வது பந்தில் களத்திற்கு வந்த இஷான் கிஷன், தனஞ்செயா டி சில்வா வீசிய அந்த பந்தை சிக்ஸருக்கு விளாசி அசத்தலாக தனது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் கெரியரை தொடங்கினார். சிக்ஸருடன் தொடங்கிய இஷான் கிஷன் 42 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 59 ரன்களை விளாசினார்.

முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது குறித்து பேசிய இஷான் கிஷன், முதல் பந்தை எப்படி போட்டாலும் அதை சிக்ஸர் அடிப்பேன் என்று ஓய்வறையில் அனைவரிடமும் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். அது அனைவருக்குமே தெரியும் என்று இஷான் கிஷன் தெரிவித்தார்.
 

click me!