முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி, ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் அபார சதம் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடியான அரைசதம் ஆகியவற்றின் விளைவாக 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது.
இந்த போட்டியில், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர். இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கலுக்கு தீர்வாக அமைந்த ஷ்ரேயாஸ் ஐயர், தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் நிலையில், இன்றைய போட்டியில் சதமடித்து அசத்தினார். 5ம் வரிசையில் இறங்கிய கேஎல் ராகுல், அதிரடியாக ஆடி 64 பந்தில் 88 ரன்களை விளாசினார். இவர்களின் அதிரடியான பேட்டிங்கால் 50 ஓவரில் 347 ரன்களை விளாசியது இந்திய அணி.
348 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஹென்ரி நிகோல்ஸ், அனுபவ வீரர் ரோஸ் டெய்லர், கேப்டன் டாம் லேதம் ஆகிய மூவரின் அதிரடியான பேட்டிங்கால் 49வது ஓவரிலேயே இலக்கை எட்டி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய டெய்லர் சதமடித்து அசத்தினார். 109 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று, நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். பும்ராவும் ஷமியும் மட்டுமே இந்த போட்டியில் ஓரளவிற்கு கட்டுக்கோப்பாக வீசினர். ஜடேஜாவும் பரவாயில்லை. இவர்கள் மூவரும் 10 ஓவர்கள் வீசிய நிலையில், கிட்டத்தட்ட பந்துக்கு நிகரான ரன்களையே விட்டுக்கொடுத்தனர். இந்த போட்டியில் நியூசிலாந்தின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தது, குல்தீப் மற்றும் ஷர்துல் தாகூரின் பவுலிங் தான்.
குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூரின் பவுலிங்கை அடித்து துவம்சம் செய்தனர் நியூசிலாந்து வீரர்கள். அவர்கள் வழங்கிய கூடுதல் ரன்கள் தான் நியூசிலாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. குல்தீப் யாதவ் 84 ரன்களையும் ஷர்துல் தாகூர் 80 ரன்களையும் வழங்கினர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி விரட்டி வெற்றி பெற்ற அதிகபட்ச இலக்கு இதுதான். அதேபோல இந்திய அணியின் படுமோசமான இரண்டாவது தோல்வி இது. இந்த போட்டியில் இதுபோன்ற இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. அவற்றை பார்ப்போம்..
1. ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி, இரண்டாவது பேட்டிங்கில் விரட்டி வெற்றி பெற்ற அதிகபட்ச இலக்கு இதுதான். ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங்கில் நியூசிலாந்தின் மிகச்சிறந்த வெற்றி இதுதான். இதற்கு முன் 2007ல் இதே ஹாமில்டனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 347 ரன்களை விரட்டியதுதான் நியூசிலாந்தின் மிகச்சிறந்த வெற்றியாக இருந்தது.
2. அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மோசமான தோல்விகளில் இதுதான் இரண்டாவது மோசமான தோல்வி. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 358 ரன்களை குவித்த இந்திய அணி, அதை தடுக்க முடியாமல் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதற்கடுத்த மிகப்பெரிய தோல்வி இதுதான்.
3. ஒரே போட்டியில் இரு அணிகளின் நான்காம் வரிசை பேட்ஸ்மேனும் சதமடிப்பது, இதுதான் மூன்றாவது முறை. இதற்கு முன், 2007ல் தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையேயான போட்டியில், நான்காம் வரிசையில் இறங்கிய டிவில்லியர்ஸும் தைபுவும் சதமடித்துள்ளனர். அதேபோல 2017ல் இந்தியா - இங்கிலாந்து இடையேயான போட்டியில் நான்காம் வரிசையில் பேட்டிங் ஆடிய யுவராஜ் சிங்கும், இயன் மோர்கனும் சதமடித்தனர். அதன்பின்னர் இந்த போட்டியில் நான்காம் வரிசையில் பேட்டிங் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயரும் ரோஸ் டெய்லரும் சதமடித்துள்ளனர்.