ரோஸ் டெய்லர் அதிரடி சதம்.. கடின இலக்கை அசால்ட்டா அடித்து நியூசிலாந்து அபார வெற்றி.. இந்தியா படுதோல்வி

By karthikeyan VFirst Published Feb 5, 2020, 4:06 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 348 ரன்கள் என்ற கடின இலக்கை 49வது ஓவரிலேயே அடித்து நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் அபார சதம், விராட் கோலியின் பொறுப்பான அரைசதம் மற்றும் கேஎல் ராகுலின் அதிரடியான பேட்டிங்கின் விளைவாக 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது. 

அறிமுக வீரர்கள் பிரித்வி ஷாவும் மயன்க் அகர்வாலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களை சேர்த்தனர். பிரித்வி ஷா 20 ரன்களிலும் மயன்க் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த விராட் கோலி, உடனடியாக ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயரும் ராகுலும் இணைந்து 30 ஓவருக்கு பிறகு அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த ஷ்ரேயாஸ் ஐயர், 103 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 பந்தில் 88 ரன்களை குவித்தார். இதையடுத்து இந்திய அணி 50 ஓவரில் 347 ரன்களை குவித்தது. 

348 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டிலும் ஹென்ரி நிகோல்ஸும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 85 ரன்களை சேர்த்தனர். கப்டில் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மூன்றாம் வரிசையில் களத்திற்கு வந்த டாம் பிளண்டெல் வெறும் 9 ரன்களில் அவுட்டானார். 

இதையடுத்து ஹென்ரி நிகோல்ஸுடன் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய நிகோல்ஸ், களத்தில் நிலைத்த பின்னர் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த அவர், பவுண்டரிகளை விளாசி தள்ளினார். அவருடன் இணைந்து டெய்லரும் அதிரடியாக ஆட, நியூசிலாந்தின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

மூன்றாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 62 ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி அருமையாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், இவர்களை இந்திய பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. பவுலர்களால் இந்த ஜோடியின் விக்கெட்டை வீழ்த்த முடியாத சூழலில், விராட் கோலி தனது அபாரமான ஃபீல்டிங்கின் மூலம் நிகோல்ஸை ரன் அவுட்டாக்கி, இந்த ஜோடியை பிரித்தார்.

பும்ரா வீசிய 29வது ஓவரின் மூன்றாவது பந்தை டெய்லர் அடிக்க, பிட்ச்சுக்கு பக்கத்திலேயே பந்து கிடந்தது. ஆனால் அதற்கு நிகோல்ஸும் டெய்லரும் ரன் ஓடினர். மின்னல் வேகத்தில் வேகமாக ஓடிவந்து பந்தை எடுத்து ஸ்டம்பில் அடித்தார் கோலி. 82 பந்தில் 11 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் அடித்திருந்த நிகோல்ஸ் ரன் அவுட். 

இதையடுத்து டெய்லருடன் கேப்டன் டாம் லேதம் ஜோடி சேர்ந்தார். நிகோல்ஸின் விக்கெட்டை இழந்தது, எந்தவிதத்திலும் நியூசிலாந்தின் ரன் வேகத்தை தடுத்துவிடவில்லை. நிகோல்ஸ் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் டாம் லேதம். டெய்லர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, டாம் லேதமும் அதிரடியாக ஆடினார். அதனால் ஸ்கோர் விரைவாக உயர்ந்தது. 

30-40 ஓவர்களில் டெய்லரும் டாம் லேதமும் இணைந்து இந்திய பவுலிங்கை அடித்து துவம்சம் செய்தனர். குறிப்பாக குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், ஜடேஜா ஆகியோரின்  பவுலிங்கை பொளந்துகட்டினர். ஓவருக்கு 2 பவுண்டரி அல்லது 2 சிக்ஸர்கள் வீதம் விளாசினர். ஷர்துல் தாகூர் வீசிய 40வது ஓவரில்  டெய்லர் 2 பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் விளாச, லேதம் ஒரு சிக்ஸர் விளாசினார். 

இவர்களின் அதிரடியால் 40 ஓவருக்கே 292 ரன்களை குவித்துவிட்ட நியூசிலாந்து அணிக்கு எஞ்சிய ரன்னை அடிப்பது எளிதாக இருந்தது. அரைசதம் அடித்த டாம் லேதம் 62 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, காலின் டி கிராண்ட் ஹோம் ஒரு ரன்னில் ரன் அவுட்டானார். ஜேம்ஸ் நீஷமும் சோபிக்கவில்லை. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டெய்லர் சதமடித்தார். விக்கெட்டுகள் விழுந்தாலும், அது எந்த வகையிலும் அந்த அணியின் வெற்றியை பாதிக்கவில்லை. 49வது ஓவரிலேயே இலக்கை எட்டி நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

84 பந்தில் 109 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று, நியூசிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த ரோஸ் டெய்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 
 

click me!