2 பேரில் டெஸ்ட் அணியின் தொடக்க வீரர் யார்..? க்ளூ கொடுத்த அணி நிர்வாகம்

By karthikeyan VFirst Published Feb 14, 2020, 1:09 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்கப்போவது யார் என்பது குறித்து க்ளூ கொடுத்துள்ளது இந்திய அணி நிர்வாகம்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் நிரந்தர தொடக்க வீரரான ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் மட்டும் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்தார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் முறையாக தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, அந்த தொடர் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடியதால், டெஸ்ட் அணியிலும் தொடக்க வீரராக தனது இடத்தை தக்கவைத்தார். 

இந்நிலையில், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, டி20 தொடரில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. ஒருநாள் தொடரில் நியூசிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆனது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது. இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால், இதில் வெற்றி பெறுவது அவசியம். 

முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி தொடங்குகிறது. ரோஹித் சர்மா 4வது டி20 போட்டியின்போது காயமடைந்ததால், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களிலிருந்து விலகினார். எனவே டெஸ்ட் போட்டிகளில் மயன்க் அகர்வாலுடன் களமிறங்கப்போகும் மற்றொரு தொடக்க வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

ஏனெனில் பிரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவருமே டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். இருவருமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் என்பதால் இருவரில் யார் மயன்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக இறங்குவார் என்பது கேள்வியாக இருக்கிறது.

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஏ அணியில் ஆடிய ஷுப்மன் கில், முதல் போட்டியில் இரட்டை சதமும், இரண்டாவது போட்டியில் சதமும் அடித்தார். இப்படியாக ஷுப்மன் கில் டாப் ஃபார்மில் ஆடிவரும் நிலையில், பிரித்வி ஷாவும் சிறப்பாக ஆடிவருகிறார். இருவருமே சிறந்த இளம் வீரர்கள் என்பதால், இருவரில் யார் மயன்க் அகர்வாலுடன் இறக்கப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. 

இந்நிலையில், நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், பிரித்வி ஷா - கில் ஆகிய இருவரில், தொடக்க வீரராக இறங்குவதற்கு யாருக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படும் என்பதை அணி நிர்வாகத்தின் செயலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 

பயிற்சி போட்டியில் மயன்க் அகர்வாலுடன் பிரித்வி ஷா தான் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். ஆனால் பிரித்வி ஷா நான்கே பந்தில் டக் அவுட்டானார். பிரித்வி ஷாவே பரவாயில்லை என்கிற வகையில், நான்காம் வரிசையில் இறங்கிய கில், முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார்.  ஹனுமா விஹாரியின் சதம் மற்றும் புஜாரா அடித்த 93 ரன்களின் விளைவாக, இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்கள் அடித்தது. 

Also Read - ஐபிஎல்லுக்கு பிறகு டி20 உலக கோப்பை அணியில் இடம்பெற வாய்ப்புள்ள அதிரடி வீரர்

இந்த பயிற்சி போட்டியில் ப்ரித்வி ஷா தொடக்க வீரராக இறக்கப்பட்டதன் மூலம் அவர் தான், டெஸ்ட் போட்டியிலும் மயன்க் அகர்வாலுடன் இணைந்து தொடக்க வீரராக இறங்குவார் என்று தெரிகிறது. 

click me!