இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 20 ஓவரில் 185 ரன்களை குவித்து 186 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 12 ரன்னில் ஆட்டமிழக்க, ராகுல் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோலி 5 பந்தில் ஒரே ரன் அடித்து ஆட்டமிழந்தார். 2வது போட்டியில் அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைத்திராத சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக பேட்டிங் ஆடினார். கொஞ்சம் கூட பயமே இல்லாமல், தனது இயல்பான பேட்டிங்கை ஆடி பெரிய ஷாட்டுகளை பறக்கவிட்ட சூர்யகுமார் 28 பந்தில் அரைசதம் அடித்தார்.
ஆனால் அதன்பின்னர் நீடிக்காமல் 31 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 23 பந்தில் 30 ரன்னுக்கு ஆட்டமிழக்க, அடித்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 18 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 37 ரன்கள் விளாசி கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியால் 20 ஓவரில் 185 ரன்களை குவித்த இந்திய அணி, 186 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.