மளமளவென விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி!! கோல்டன் டக்கான தோனி.. கோலியின் கையில்தான் எல்லாமே இருக்கு

By karthikeyan VFirst Published Mar 5, 2019, 4:08 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி ஒருமுனையில் நங்கூரம் போட மறுமுனையில் மற்ற வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி ஒருமுனையில் நங்கூரம் போட மறுமுனையில் மற்ற வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

தொடக்க வீரர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் தவானுடன் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி - தவான் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துவந்தது. பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற இந்த ஜோடியை மேக்ஸ்வெல் பிரித்தார். 29 பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த தவானை மேக்ஸ்வெல் வீழ்த்தினார். 9வது ஓவரிலேயே தவான் அவுட்டாகிவிட்டதால் ராயுடு களத்திற்கு வந்தார். 

பெரிய இன்னிங்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாத ராயுடு, 18 ரன்களில் நாதன் லயன் பவுலிங்கில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அதன்பிறகு கோலியுடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர், இந்த வாய்ப்பையும் நன்றாக பயன்படுத்தி கொண்டார். கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிவந்தார். சிங்கிள் ரொடேட் செய்து சிறப்பாக ஆடிய விஜய் சங்கர், அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசினார். ஒரு சிக்ஸரும் அடித்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விஜய் சங்கர், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். 

கோலி நேராக அடித்த பந்து பவுலர் ஆடம் ஸாம்பாவின் கையில் பட்டு ஸ்டம்பில் அடித்தது. அப்போது கிரீஸை விட்டு வெளியே வந்திருந்த விஜய் சங்கரால் கிரீஸை தொட முடியாததால் ரன் அவுட்டானார். சிறப்பாக ஆடிய விஜய் சங்கர், 41 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின்னர் கேதர் ஜாதவ் அவசரப்பட்டு ஸாம்பாவின் சுழலில் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்களில் வெளியேற, அதற்கு அடுத்த பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார் தோனி. 

இதையடுத்து கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 50வது அரைசதத்தை பூர்த்தி செய்த கோலி, தொடர்ந்து சதத்தை நோக்கி ஆடிவருகிறார். நாக்பூர் பேட்டிங் ஆடுகளம் என்பதால் 320-330 ரன்கள் வரை அடித்தால்தான் வெற்றி வசப்படும். கோலி சதமடித்த பிறகு டெத் ஓவர்களில் அடித்து ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
 

click me!