India vs New Zealand முதல் டி20 சூர்யகுமார் யாதவ் அதிரடி அரைசதம்..! நியூசி.,யை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Nov 17, 2021, 10:53 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகமாகினார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம்பிடித்த வெங்கடேஷ் ஐயர், முதல் தொடரிலேயே ஆடும் லெவனில் இடம்பிடித்தார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், முகமது சிராஜ்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் ஃபிலிப்ஸ், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), ராச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி (கேப்டன்), டாட் ஆஸ்டில், லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேரைல் மிட்செலை முதல் ஓவரின் 3வது பந்திலேயே மிடில் ஸ்டம்ப்பை கழட்டி கோல்டன் டக் அவுட்டாக்கி அனுப்பினார் புவனேஷ்வர் குமார். ஒரு ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்த நியூசிலாந்து அணிக்கு, 2வது விக்கெட்டுக்கு மார்டின் கப்டிலும் மார்க் சாப்மேனும் இணைந்து அருமையாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.

சாப்மேன் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். ஆரம்பத்தில் பார்ட்னர்ஷிப் அமைக்கும் வரை நிதானம் காட்டிய கப்டில், நிலைத்தபின்னர் அடித்து ஆடினார். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் அடித்ததால், இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தாக வேண்டிய கட்டாயம் நிலையில், 14வது ஓவரை வீசிய அஷ்வின், அந்த ஓவரில் ஒன்றுக்கு இரண்டு விக்கெட்டாக எடுத்து கொடுத்தார்.

சாப்மேன் 63 ரன்னில் அஷ்வின் பந்தில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் க்ளென் ஃபிலிப்ஸும் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கப்டில் சிக்ஸர்களாக பறக்கவிட, அபாயகரமான கப்டில் 42 பந்தில் 70 ரன்களை குவித்த நிலையில், 18வது ஓவரின் 2வது பந்தில் கப்டிலை தீபக் சாஹர் வீழ்த்தினார்.

கப்டில் அவுட்டாகும்போது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 150 ரன்கள். அதன்பின்னர் கடைசி 16 பந்தில் அந்த அணியால் 14 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதையடுத்து அந்த அணி 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது.

165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 15 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித்தும் சூர்யகுமார் யாதவும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர். இருவருமே அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் என்பதால், அடித்து ஆடி ரன்ரேட் எந்த சூழலிலும் குறைந்துவிடாமல் பார்த்துக்கொண்டனர்.

அடித்து ஆடிய ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் களத்திற்கு வந்து அடித்து ஆட ஆரம்பித்ததும், அவருக்கு சிங்கிள் மட்டுமே எடுத்துக்கொடுத்தார். சூர்யகுமார் யாதவ் மிடில் ஓவர்களில் அதிக பந்துகளை ஸ்டிரைக் எடுக்க, இடையில் அதிகமாக ஸ்டிரைக் எடுக்காத ரோஹித் சர்மா, 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஷாட் சரியாக கனெக்ட் ஆகாமல் திணறினார். ரிஷப் பண்ட்டும் சற்று மந்தமாக ஆட, சில பந்துகளாக பவுண்டரி கிடைக்காததால் இந்திய அணிக்கு நெருக்கடி அதிகரித்தது. எனவே அடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் 19வது ஓவரின் கடைசி பந்தை தூக்கியடித்த ஷ்ரேயாஸ் ஐயர் 8 பந்தில் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 10 ரன்கள் தேவைப்பட, அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயர், கடைசி ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து 2வது பந்தில் ஆட்டமிழந்தார். 3வது பந்தை வைடாக வீசிய டேரைல் மிட்செலின் அடுத்த பந்தில்(3வது ரீபால்) அக்ஸர் படேல் சிங்கிள் எடுக்க, 4வது பந்தில் பவுண்டரி அடித்து போட்டியை முடித்தார் ரிஷப் பண்ட்.

இதையடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
 

click me!