ரோஹித் - ராகுல் அதிரடி அரைசதம்.. நமீபியாவுக்கு எதிரான வெற்றியுடன் டி20 உலக கோப்பையிலிருந்து வெளியேறிய இந்தியா

By karthikeyan VFirst Published Nov 8, 2021, 10:35 PM IST
Highlights

ரோஹித் - ராகுலின் அதிரடி அரைசதங்களால் நமீபியா நிர்ணயித்த 133 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 

டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு க்ரூப் 1-ல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளும் முன்னேறிவிட்ட நிலையில், எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாத இன்றைய கடைசி சூப்பர் 12 சுற்று போட்டியில் இந்தியாவும் நமீபியாவும் மோதின.

அனுபவமில்லாத அசோஸியேட் அணியான நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்பது அறிந்ததுதான். துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்திய அணி:

கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ராகுல் சாஹர், ஜஸ்ப்ரித் பும்ரா.

நமீபியா அணி:

ஸ்டீஃபன் பார்டு, மைக்கேல் வான் லிங்கன், க்ரைக் வில்லியம்ஸ், கெர்ஹார்டு எராஸ்மஸ் (கேப்டன்), ஜேன் க்ரீன் (விக்கெட் கீப்பர்), டேவிட் வீஸ், ஜேன் ஃப்ரைலிங்க், ஜேஜே ஸ்மிட், ஜான் நிகோல் லாஃப்டி ஈட்டான், ருபென் ட்ரம்பெல்மேன், பெர்னார்டு ஸ்கால்ட்ஸ்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நமீபியா அணியில் எந்த வீரருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. தொடக்க வீரர்கள் லிங்கன் 14 ரன்னிலும், பார்ட் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பார்டை வீழ்த்திய ஜடேஜா, க்ரைக் வில்லியம்ஸையும் டக் அவுட்டாக்கி அனுப்பினார். அதன்பின்னர் கேப்டன் எராஸ்மஸ் (12) மற்றும் லாஃப்டி-ஈட்டான் (5) ஆகிய இருவரையும் அஷ்வின் வீழ்த்தினார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்வினும் ஜடேஜாவும் இணைந்து களத்தில் கலக்கினர். 

அதன்பின்னர் ஜேஜே ஸ்மிட்டை (9) ஜடேஜாவும், ஜேன் க்ரீனை (0) அஷ்வினும் வீழ்த்தினர். ஷமி வீசிய கடைசி ஓவரில் ட்ரம்பல்மேன் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து முடிக்க, 20 ஓவரில் 132 ரன்கள் அடித்த நமீபியா அணி, 133 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. இந்திய அணி சார்பில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

133 ரன்கள் என்ர இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவருமே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். ஆரம்பத்தில் ரோஹித் சர்மா அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 37 பந்தில் 56 ரன்களுக்கு ரோஹித் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராகுலும் அரைசதம் அடித்தார். 36 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2சிக்சர்களுடன் 54 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்துக்கொடுத்தார் ராகுல். சூர்யகுமார் யாதவ் 19 பந்தில் 25 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 16வது ஓவரில் இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. அரையிறுதிக்கு முன்னேறவில்லை என்றாலும், வெற்றியுடன் டி20 உலக கோப்பையிலிருந்து வெளியேறியது இந்திய அணி.
 

click me!