Asia Cup: ஹாங்காங்கை எளிதாக வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

By karthikeyan VFirst Published Sep 1, 2022, 7:29 AM IST
Highlights

ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - Asia Cup: ஜெயித்த இந்தியா, தோற்றுப்போன பாகிஸ்தான் 2 அணிகளுக்கும் ஆப்பு அடித்த ஐசிசி

ஹாங்காங் அணி:

நிஜாகத் கான் (கேப்டன்), யாசிம் முர்டாசா, பாபர் ஹயாத், கிஞ்சித் ஷா, ஐஜாஸ் கான், ஸ்காட் மெக்கென்னி (விக்கெட் கீப்பர்), ஜீஷன் அலி, ஹரூன் அர்ஷத், ஈசான் கான், ஆயுஷ் ஷுக்லா, முகமது கஜன்ஃபர்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 13 பந்தில் 21 ரன்கள் அடித்தார். 36 ரன்கள் அடித்த ராகுல் 13வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 96 ரன்கள் ஆகும். 

விராட் கோலி சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடிக்க, 4ம் வரிசையில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் காட்டடி அடித்து அரைசதம் அடித்தார். வெறும் 26 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்தார். கோலி 44 பந்தில் 59 ரன்கள் அடித்தார்.  சூர்யகுமாரின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 192 ரன்களை குவித்தது இந்திய அணி.

இதையும் படிங்க - சூர்யகுமார் யாதவுக்கு முன் என்னை பேட்டிங் ஆட இறக்கிவிட்டதற்கு இதுதான் காரணம்..! ஜடேஜா விளக்கம்

193 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஹாங்காங் அணியில் பாபர் ஹயாத் (41) மற்றும் கிஞ்சித் ஷா(30) ஆகிய இருவர் மட்டுமே ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ஆடினர். பின்வரிசையில் ஜாகீன் அலி அதிரடியாக ஆடி 17 பந்தில் 26 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹாங்காங் அணி 20 ஓவரில் 152 ரன்கள் மட்டுமே அடித்தது.

40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
 

click me!