INDvsENG பேட்டிங்கில் மிரட்டிய ரோஹித்-கோலி; பவுலிங்கில் அசத்திய புவி! கடைசி டி20யில் வென்று தொடரைவென்ற இந்தியா

By karthikeyan VFirst Published Mar 20, 2021, 11:00 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3-2 என தொடரை வென்றது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடர் 2-2 என சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இந்த போட்டியில் இந்திய அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்கியது. கேஎல் ராகுலுக்கு பதிலாக கூடுதல் பவுலராக டி.நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டார். 

ராகுல் ஆடாததால் ரோஹித்துடன் கோலி தொடக்க வீரராக இறங்கினார். ஆரம்பத்திலிருந்தே ரோஹித் சர்மா அடித்து ஆட, கோலி அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிங்கிள் எடுத்து கொடுத்தார். அடித்து ஆடிய ரோஹித் சர்மா, மார்க் உட், ஆர்ச்சர் ஆகிய இருவரின் வேகத்தையும் அடித்து நொறுக்கினார்.

ரோஹித்தின் அதிரடியால் பவர்ப்ளேயில்(6 ஓவரில்) விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் அடித்தது இந்திய அணி. அடித்து ஆடி அரைசதம் அடித்த ரோஹித் சர்மா,  34 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் அடித்து ஸ்டோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியிலும் அபாரமாக ஆடினார். 17 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 32 ரன்களை விளாசி சூர்யகுமார் யாதவ் அடில் ரஷீத்தின் சுழலில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார்.

தொடக்க வீரராக இறங்கிய ஆரம்பத்தில் நிதானமாகவும், பின்னர் அடித்தும் ஆடி அரைசதம் அடிக்க, ஹர்திக் பாண்டியா, தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடினார். ஹர்திக் பாண்டியா 17 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் அடிக்க, அரைசதம் அடித்த கேப்டன் கோலி, கடைசி வரை களத்தில் நின்று 52 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவிக்க, இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது.

225 ரன்கள் என்ற  கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராயை முதல் ஓவரின் 2வது பந்திலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் புவனேஷ்வர் குமார். அதன்பின்னர் பட்லரும் டேவிட் மாலனும் இணைந்து இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கினர்.

பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி வேகமாக ஸ்கோர் செய்தனர். பட்லரும் மாலனும் இணைந்து 13 ஓவரில் 130 ரன்களை குவித்தனர். அவர்கள் இருவரும் களத்தில் இருந்தபோது இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. 14வது ஓவரில் 52 ரன்னில் பட்லரை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் புவனேஷ்வர் குமார்.

இதையடுத்து 15வது ஓவரில் பேர்ஸ்டோ மற்றும் மாலன் ஆகிய இருவரையும் வீழ்த்தினார் ஷர்துல் தாகூர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து, இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த மாலனை ஷர்துல் தாகூர் வீழ்த்திய பின்னர், வெற்றி இந்தியா வசமானது.

மாலன் 46 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் அடித்தார். பட்லரும் மாலனும் ஆட்டமிழந்த பின்னர், ஆட்டம் தலைகீழாக மாறியது. மாலன் அவுட்டாகும்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 15 ஓவரில் 142 ரன்கள். அவர் ஆட்டமிழந்த பிறகு, எஞ்சிய கடைசி 5 ஓவரில் இங்கிலாந்து அணி வெறும் 46 ரன்கள் மட்டுமே அடித்து 188 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து இந்திய அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-2 என தொடரை வென்றது.
 

click me!