இந்தியா அபார பவுலிங்.. 34 ஓவரில் வங்கதேசத்தை 182 ரன்களுக்கு சுருட்டி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Published : Dec 10, 2022, 07:35 PM IST
இந்தியா அபார பவுலிங்.. 34 ஓவரில் வங்கதேசத்தை 182 ரன்களுக்கு சுருட்டி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி.  

இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று வங்கதேசம் 2-0 என ஒருநாள் தொடரை  வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். ரோஹித்துக்கு பதிலாக ஷிகர் தவானுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

இந்திய அணி:

ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், உம்ரான் மாலிக். 

வங்கதேச அணி:

அனாமுல் ஹக், லிட்டன் தாஸ் (கேப்டன்), யாசிர் அலி, ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், எபடாட் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், டஸ்கின் அகமது.

BAN vs IND: 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் ஷமிக்கு பதிலாக இணையும் ஃபாஸ்ட் பவுலர்..!

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவான் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் இஷான் கிஷன் அதிரடியாக பேட்டிங்  ஆடி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை விளாசினார். தனது முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி வரலாற்று சாதனை படைத்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 131 பந்தில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 210 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இஷான் கிஷன் - கோலி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 290 ரன்களை குவித்தனர். இஷான் கிஷன் 210 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவருடன் இணைந்து அபாரமாக விளையாடிய விராட் கோலி, சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் சதமடித்தார். 86 பந்தில் சதமடித்த விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 44வது சதத்தை விளாசினார். கடைசியாக 2019 மார்ச் மாதம் சதமடித்த விராட் கோலி, அதன்பின்னர் ஒருநாள் போட்டியில் இன்றுதான் சதமடித்தார்.

கோலி 91 பந்தில் 113 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் (3), கேஎல் ராகுல் (8) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பின்வரிசையில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் 27 பந்தில் 37 ரன்களை விளாச, 50 ஓவரில் 409 ரன்களை குவித்தது இந்திய அணி.

410 ரன்கள் என்ற சாத்தியமே இல்லாத இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் சீனியர் வீரர் ஷகிப் அல் ஹசன் தான் அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து, 34 ஓவர்களில் வெறும் 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முதல் 2 போட்டிகளில் அபாரமாக விளையாடிய மெஹிடி ஹசன், இந்த போட்டியில் வெறும் 3 ரன் மட்டுமே அடித்தார். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி வெறும் 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ரோஹித், கங்குலி, கெய்ல் சாதனைகள் காலி.. இரட்டை சதம் விளாசி ஏகப்பட்ட சாதனைகளை வாரிக்குவித்த இஷான் கிஷன்

இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய ஷர்துல் தாகூர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்ஸர் படேல் மற்றும் உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஒருநாள் தொடரை இழந்தாலும், கடைசி போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது இந்திய அணி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!