IPL 2025 Prize Money: ஐபிஎல் 2025 சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றைய இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தங்கள் அணி கோப்பையை வெல்லும் என இரு அணிகளின் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில்,
ஐபிஎல் 2025 சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்? 2வது இடம் பிடிக்கும் அணிகள் மற்றும் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுக்கும் வீரர்களுக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.
கோப்பை வெல்லும் அணிக்கு எவ்வளவு?
ஐபிஎல் தொடரில் எப்போதும் போல இந்த முறையும் வீரர்களுக்கு பண மழை பொழிய உள்ளது. ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குப் பரிசு கிடைக்கும். தகவலின்படி, ஐபிஎல் 2025 பரிசுத் தொகை கடந்த சீசனைப் போலவே இருக்கும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு கிட்டத்தட்ட ரூ.13 கோடி பரிசு கிடைக்கும்.
ஆரஞ்சு கேப் வீரருக்கு எவ்வளவு கிடைக்கும்?
புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த அணிக்கு ரூ.7 கோடியும், நான்காவது இடம் பிடித்த அணிக்கு ரூ.6.5 கோடியும் வழங்கப்படும். மேலும் அதிக ரன்கள் எடுத்த வீரரான குஜராத் டைட்டன்ஸின் சாய் சுதர்சன் (15 போட்டிகளில் 759 ரன்கள்) ஆரஞ்சு கேப் உடன் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளரான குஜராத் டைட்டன்ஸின் பிரசித் கிருஷ்ணா (15 போட்டிகளில் 25 விக்கெட்) பர்பிள் கேப் உடன் 10 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்.
அதிக பவுண்டரி, அதிக சிக்சர் அடிப்பவர்களுக்கு எவ்வளவு?
மேலும் இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடும் இளம் வீரருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இது தவிர தொடர் நாயகன் விருது பெறும் வீரருக்கும் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இதுதவிர தினமும் ஒவ்வொரு போட்டிகளின் முடிவின்போதும் ஆட்டநாயகன் விருது பெறும் வீரர், அதிக பவுண்டரிகளை விளாசும் வீரர், அதிக சிக்சர்களை பறக்க விடும் வீரர் மற்றும் அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் வீரருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.