ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆடிவருகின்றனர். அதற்கான காரணத்தை பார்ப்போம்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால், 2ம் நாளான இன்றுதான் ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் நன்றாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்தனர். ரோஹித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து கில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து புஜாராவும் கோலியும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர்.
இந்த போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆடிவருகின்றனர். இந்தியாவின் முன்னாள் லெஜண்ட் தடகள வீரர் மில்கா சிங் நேற்றிரவு 11.30 மணிக்கு காலமானார். இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்றுகொடுத்த ஜாம்பவான் ஓட்டப்பந்தய வீரரான மில்கா சிங், 91 வயதில் காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக கொரோனாவுடன் கடுமையாக போராடிய மில்கா சிங், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
இந்தியாவில் அனைத்துவிதமான விளையாட்டு வீரர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்த மில்கா சிங்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்திய வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆடிவருகின்றனர்.