தோனி கேப்டனாவதற்கு வித்திட்ட சம்பவம்.. தோனிக்குள் இருந்த கேப்டனை கண்டறிந்த சச்சின்

By karthikeyan VFirst Published Aug 16, 2020, 4:44 PM IST
Highlights

பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், கேப்டன் என்ற பல முகங்களில், தோனியின் அடையாளமாக திகழ்வது அவரது கேப்டன்சி தான். அந்தவகையில், மிகச்சிறந்த கேப்டனான தோனிக்குள் இருந்த கேப்டன்சி திறனை சச்சின் டெண்டுல்கர் கண்டறிந்த சுவாரஸ்ய சம்பவத்தை பற்றி பார்ப்போம்.
 

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. 

நெருக்கடியான சூழல்களிலும் பதற்றப்படாமல், நேர்மறையான சிந்தனையோடு வீரர்களை ஊக்கப்படுத்தி வெற்றியை வசப்படுத்துவதால் கேப்டன் கூல் என தோனி அழைக்கப்படுகிறார். வெற்றிகரமான கேப்டனாக வலம்வந்த தோனி, தான் கேப்டனானதற்கு சச்சின் மிக முக்கிய காரணம் என பல தருணங்களில் பல மேடைகளில் கூறியுள்ளார்.

2007 உலக கோப்பையில், லீக் சுற்றுடன் டிராவிட் தலைமையிலான இந்திய அணி வெளியேறியது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று டிராவிட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதற்கடுத்த கேப்டன் தேடுதலின்போது, அணியில் தோனியைவிட சீனியர்கள் சிலர் இருந்தும்கூட, அப்போதைய இளம் வீரரான தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். சச்சின் உள்ளிட்ட சில அனுபவ சீனியர் வீரர்களின் ஆதரவு தோனிக்கு இருந்தது. அவர்கள் தோனியிடம் கண்ட தலைமைப் பண்புகளின் காரணமாக தோனிக்கு ஆதரவாக இருந்தனர்.

அவர்களில் முக்கியமானவர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில், தோனியிடம் இருந்த கேப்டன்சி திறனை கண்டறிந்தது எப்படி என சச்சின் ஏற்கனவே பேசியிருக்கிறார்.

தோனியிடம் இருந்த கேப்டன்சி திறனை கண்டுபிடித்தது தொடர்பாக பேசிய சச்சின், நான் ஸ்லிப்பில் ஃபீல்டிங் செய்யும்போதெல்லாம், விக்கெட் கீப்பிங் செய்யும் தோனியிடம் ஃபீல்டிங் பொசிசன் குறித்து விவாதிப்பேன். அப்போது எனது கருத்தை தெரிவித்துவிட்டு அவரது கருத்தையும் கேட்பேன். அவரும் கூறுவார். அப்போதுதான் அவரிடம் இருந்த கேப்டன்சி திறன், கிரிக்கெட் தெளிவு குறித்து தெரிந்துகொண்டேன் என சச்சின் தெரிவித்தார். 
 

click me!