மஞ்சரேக்கருக்கு பதில் சொல்றதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.. யாருக்குமே தெரியாத ரகசியம் பகிர்ந்த ஹர்ஷா போக்ளே

By karthikeyan VFirst Published Jan 7, 2020, 4:29 PM IST
Highlights

தனது சக வர்ணனையாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தன்னை நோக்கி எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அதற்கான பதிலையும் தெரிவித்துள்ளார் ஹர்ஷா போக்ளே. 
 

இந்தியா - வங்கதேசம் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில், இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரின் துல்லியமான வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் தலையிலும் உடம்பிலும் பயங்கரமாக அடி வாங்கினர். அதிலும் அந்த அணி வீரர்கள், இரண்டு இன்னிங்ஸ்களிலுமே பெரும்பாலும், லைட் வெளிச்சத்தில் இரவில்தான் ஆடினார்கள்.

வங்கதேச வீரர்கள் சரியாக ஆடாமல் உடம்பில் அடி வாங்கியதை அடுத்து, பிங்க் பந்து லைட் வெளிச்சத்தில் நன்றாக தெரிகிறதா? என்பது குறித்து அனைத்து வீரர்களிடம் கண்டிப்பாக கருத்து கேட்க வேண்டும் என்று வர்ணனையின்போது ஹர்ஷா போக்ளே தெரிவித்தார். ஹர்ஷா போக்ளேவின் இந்த கருத்துக்கு சஞ்சய் மஞ்சரேக்கர் முரண்பட, அந்த விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மஞ்சரேக்கரின் ஆணவமான கருத்துடன் அந்த விவாதம் சர்ச்சையில் முடிந்தது. மஞ்சரேக்கரின் ஆணவ பேச்சுக்கு ரசிகர்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

அந்த விவாதம் இதோ...

ஹர்ஷா போக்ளே: லைட் வெளிச்சத்தில் பிங்க் பந்து கண்ணுக்கு நன்றாக தெரிகிறதா என்று அனைத்து வீரர்களிடமும் கருத்து கேட்க வேண்டும். 

சஞ்சய் மஞ்சரேக்கர்: அதற்கெல்லாம் அவசியமில்லை. ஸ்லிப்பில் நிற்கும் ஃபீல்டர்கள் கேட்ச் பிடிப்பதை வைத்தே பந்து நன்றாக தெரிகிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே பந்து கண்ணுக்கு தெரிகிறதா என்ற கேள்வி தேவையேயில்லை. 

ஹர்ஷா போக்ளே: நான் இரு அணிகளில் உள்ள அனைத்து வீரர்களிடமும் பந்து கண்ணுக்கு தெரிகிறதா என்று கேட்கப்போகிறேன்.

சஞ்சய் மஞ்சரேக்கர்: உங்களுக்கு தெளிவு தேவையென்றால் நீங்கள் வேண்டுமனால் கேட்கலாம். ஆனால் கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்ட எங்களை போன்ற வீரர்களுக்கு களத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். 

ஹர்ஷா போக்ளே: கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்டிருந்தாலும், கற்றுக்கொள்வதில் தவறில்லை. வீரர்களிடம் இதுபோன்ற கருத்துகளை இதற்கு முன் கேட்டிருக்கவில்லையென்றால், டி20 போட்டி, பகலிரவு போட்டிகள் எல்லாம் இப்போது இருந்திருக்கவே இருந்திருக்காது. அனைத்து வீரர்களிடமும் கருத்து கேட்பதுதான் சரியானது.

மஞ்சரேக்கர்: உங்கள் கருத்தை குறித்துக்கொள்கிறேன். ஆனால் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 

இவ்வாறாக அந்த விவாதம் நடந்து முடிந்தது. இந்த சம்பவத்தை அடுத்து சஞ்சய் மஞ்சரேக்கர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில், இது நடந்து சுமார் ஒன்றரை மாதம் கடந்த நிலையில், அண்மையில் அந்த விவகாரத்தில் தனது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்த சஞ்சய் மஞ்சரேக்கர், மன்னிப்பும் கேட்டார். 

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஹர்ஷா போக்ளே, சஞ்சய் மஞ்சரேக்கரின் கேள்விக்கு பதிலளிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அவரது கருத்தை தெரிவிக்கலாம். அந்த வகையில் மஞ்சரேக்கர் சொன்னது அவரது கருத்து. ஆனால் அவரது கருத்துக்கு பதிலளிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை. நானும் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். நிறைய பேருக்கு இது ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. யுனிவர்சிட்டி அணி மற்றும் டிவிசன் போட்டிகளிலும் ஆடியிருக்கிறேன் என்று மஞ்சரேக்கர் தெரிவித்தார். 

மேலும் மஞ்சரேக்கருக்கு பதிலடி கொடுத்து பேசிய ஹர்ஷா போக்ளே, வர்ணனையாளர் என்பவர் ரசிகர்களுக்கு கற்றுக்கொடுப்பவர் அல்ல. களத்தில் என்ன நடக்கிறது என்பதை கதையாக சொல்பவர். எனவே, கிரிக்கெட் தெரிந்த கதை சொல்ல வல்ல யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று போக்ளே பதிலடி கொடுத்துள்ளார். 
 

click me!