
ஐபிஎல் 15வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் கேகேஆரும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், அல்ஸாரி ஜோசஃப், லாக்கி ஃபெர்குசன், யஷ் தயால், முகமது ஷமி.
கேகேஆர் அணி:
வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ்(விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், டிம் சௌதி, ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 7 ரன்னுக்கு ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தொடக்கம் முதலே அடித்து ஆடினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ரிதிமான் சஹா 25 பந்தில் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர் 27 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். சஹா, மில்லர் ஆகியோருக்கு நல்ல தொடக்கம் கிடைத்தபோதிலும், அதை அவர்கள் பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை.
ஆனால் சிறப்பாக பேட்டிங் ஆடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தார். 49 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் அடித்து ஆட்டத்தின் முக்கியமான கட்டத்தில் 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்தபின்னர் அணியின் ஸ்கோர் உயரவே இல்லை. அதன்பின்னர் 5 விக்கெட்டுகள் விழுந்தன. ஹர்திக் பாண்டியா அவுட்டான அதே 18வது ஓவரில் ரஷீத் கானும் டக் அவுட்டாக, கடைசி ஓவரை வீசிய ஆண்ட்ரே ரசல், அந்த ஓவரில் அபினவ் மனோகர்(2), ராகுல் டெவாட்டியா(17), ஃபெர்குசன் (0) மற்றும் யஷ் தயால்(0) ஆகிய நால்வரையும் வீழ்த்தினார்.
இதையடுத்து 20 ஓவரில் 156 ரன்கள் அடித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, கேகேஆருக்கு 157 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.