IPL 2021 க்ளென் மேக்ஸ்வெல்லின் அதிரடியால் ஷார்ஜாவில் பஞ்சாப் கிங்ஸுக்கு கடின இலக்க நிர்ணயித்த ஆர்சிபி

By karthikeyan VFirst Published Oct 3, 2021, 5:23 PM IST
Highlights

க்ளென் மேக்ஸ்வெல்லின் அதிரடி அரைசதத்தால், பேட்டிங் ஆடுவதற்கு சவாலான ஷார்ஜாவில் 20 ஓவரில் 164 ரன்கள் அடித்து, சற்று கடினமான இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது ஆர்சிபி அணி.
 

ஐபிஎல் 14வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி ஷார்ஜாவில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் ஆடியது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் கோலியும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 9.4 ஓவரில் 68 ரன்களை சேர்த்தனர். கோலி 25 ரன்னிலும், டேனியல் கிறிஸ்டியன் ரன்னே அடிக்காமலும் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

ரவி பிஷ்னோய் வீசிய 8வது ஓவரின் 3வது பந்திலேயே அவுட்டாகியிருக்க வேண்டிய, ஆனால் டிவி அம்பயர் செய்த தவறால் தப்பிய தேவ்தத் படிக்கல் 40 ரன்களுக்கு டேனியல் கிறிஸ்டியனின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த மேக்ஸ்வெல், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 29 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக தொடர்ச்சியாக 3வது அரைசதத்தை விளாசினார் மேக்ஸ்வெல். ஆனால் மற்றொரு பவர் ஹிட்டரான டிவில்லியர்ஸ் அர்ஷ்தீப் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசி அதிரடியை ஆரம்பத்த மாத்திரத்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

ஷமி வீசிய கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 20 ஓவரில் 164 ரன்கள் அடித்த ஆர்சிபி அணி, 165 ரன்கள் என்ற கடின இலக்கை பஞ்சாப் கிங்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. மிகவும் ஸ்லோவான ஷார்ஜா பிட்ச்சில் 164 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர். 165 ரன்கள் என்பது ஷார்ஜா பிட்ச்சை பொறுத்தமட்டில் கடினமான இலக்குதான். 

ஆனால் ராகுல், மயன்க் அகர்வால் சேஸிங்கை விரும்புபவர்கள். பூரன், ஷாருக்கான், சர்ஃபராஸ் கான் ஆகிய அதிரடி ஃபினிஷர்கள் இருப்பதால், இந்த இலக்கை பஞ்சாப் அணி அடித்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
 

click me!