ஆஸ்திரேலிய அணியை அல்லு தெறிக்கவிடும் கம்பீர்..! நம்ம பசங்க கெத்து காட்டுவாங்கனு நம்பிக்கை

By karthikeyan VFirst Published Jul 17, 2020, 3:30 PM IST
Highlights

இந்திய அணி மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் குறித்து நம்பிக்கையாக பேசியுள்ளார் கவுதம் கம்பீர்.
 

கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாத மத்தியிலிருந்து எந்த கிரிக்கெட் போட்டியும் நடக்காத நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்பட்டாலும், மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியிருப்பது கிரிக்கெட் உலகிற்கு நல்ல சமிக்ஞையாக அமைந்துள்ளது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின், இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் மற்றும் டி20 தொடர் நடக்கவுள்ளது. அக்டோபர்-நவம்பர் காலத்தில் ஐபிஎல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதைத்தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆடவுள்ளது. கடந்த முறை 2018ல் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சென்றபோது, நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதல் முறையாக 2018-2019 டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்தது. 

இந்நிலையில், அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறது. கடந்த முறை ஸ்மித் - வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தி தொடரை வென்றுவிட்டது. ஆனால் இந்த முறை, ஸ்மித் - வார்னர் மட்டுமல்லாது, லபுஷேன் என்ற மற்றொரு மிகச்சிறந்த வீரரும் இணைந்துள்ளார். எனவே வரப்போகும் ஆஸ்திரேலிய தொடர் இந்தியாவிற்கு கடும் சவாலாக இருக்கும். 

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே இந்த முறை பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டு துறைகளிலும் சமபலம் வாய்ந்த அணிகளாக திகழும் நிலையில், இந்த சுற்றுப்பயணம் கண்டிப்பாக இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். ஏனெனில் இந்திய அணியில் ரோஹித் - கோலி என்றால் ஆஸ்திரேலியாவில் வார்னர் - ஸ்மித், இந்தியாவிற்கு புஜாரா, ஆஸி.,க்கு லபுஷேன், இந்தியாவிற்கு பும்ரா, ஷமி, இஷாந்த், ஆஸி.,க்கு கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், இந்தியாவிற்கு அஷ்வின்/ஜடேஜா, ஆஸி.,க்கு நேதன் லயன் என இரு அணிகளும் சம்பலம் வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன. 

எனவே இந்திய அணியின் இந்த ஆண்டு சுற்றுப்பயணத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஸ்மித் - வார்னர் அணிக்கு திரும்பிவிட்டதால், இந்த முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகக்கடினமானதாக இருக்கும் என ராகுல் டிராவிட், கங்குலி ஆகிய முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியாவை மீண்டும் சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு தகுதியான அணி தான் கோலி தலைமையிலான இந்திய அணி என்றாலும், கடந்த முறை போல எளிதாக இருக்காது என்பதுதான் முன்னாள் ஜாம்பவான்களின் கருத்து. 

ஆனால், இந்திய அணி கண்டிப்பாக மீண்டும் ஆஸ்திரேலியாவில் வெல்லும் என கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், உலகின் எந்த கண்டிஷன்களிலும் எந்த அணியையும் மிரட்டக்கூடிய அளவிற்கு திறமையான ஃபாஸ்ட் பவுலர்களை இந்திய அணி பெற்றுள்ளது. கடந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பெருமையுடன் இந்த முறை செல்கிறோம். கண்டிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா கடும் சவாலாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் கம்பீர்.  

ஸ்மித், வார்னர் அணியில் இருந்தாலும், அவர்களையும் மிரட்டக்கூடிய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் இந்தியாவிடம் இருப்பதால், கவலைப்பட தேவையில்லை என்பது கம்பீரின் கருத்து. 
 

click me!