2011 உலக கோப்பையை வென்ற தருணம் தான் இந்திய கிரிக்கெட்டின் வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்றது; அதுவும் சொந்த மண்ணில்.. மும்பை வான்கடேவில், தோனி சிக்ஸர் விளாச, 28 ஆண்டுகள் கழித்து இந்திய அணி இரண்டாவது உலக கோப்பையை வென்றது.
கங்குலி தலைமையிலான இந்திய அணி, 2003 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை சென்றும், இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. அதன்பின்னர், 2007 உலக கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறியது இந்திய அணி. பின்னர் 2011 உலக கோப்பையில் தோனி தலைமையில் களம் கண்ட இந்திய அணி, சொந்த மண்ணில் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
தோனி உட்பட அவர் தலைமையிலான அந்த அணியில் ஆடிய நட்சத்திர வீரர்களான சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் கங்குலியால் அடையாளம் காணப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்.
இந்நிலையில், 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் தோனி வின்னிங் சிக்ஸரை விளாசிய அந்த தருணம் தான் இந்திய கிரிக்கெட்டின் காலத்தால் அழியாத வரலாற்று தருணம் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, என்னை பொறுத்தமட்டில் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த நாள் என்றால், அது 2011ல் உலக கோப்பையை வென்ற தினம் தான். கிரேட் தோனி அடித்த அந்த கடைசி சிக்ஸர்.. அந்த தருணம் தான், இந்திய கிரிக்கெட்டின் வரலாற்று சிறப்புமிக்க தருணம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. மும்பை வான்கடேவில், வர்ணனையாளர் பாக்ஸில் இருந்த நான், தோனி களத்திற்கு செல்லும்போது, அங்கிருந்து இறங்கி வந்துவிட்டேன். 2003 உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று, கோப்பையை இழந்த கேப்டனான எனக்கு, தோனிக்கு உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார்.