அவங்க 2 பேருல என்னோட தேர்வு அவருதான்!! கங்குலி அதிரடி

By karthikeyan VFirst Published Mar 15, 2019, 5:00 PM IST
Highlights

உலக கோப்பை நெருங்கிய நிலையில், மாற்று விக்கெட் கீப்பர் யார் என்பது பெரும் விவாதக்களம் ஆகியிருக்கிறது. இந்நிலையில், இதுதொடர்பான தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் கங்குலி. 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பை அணிக்கான 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். ஒன்றிரண்டு இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்துவருகிறது. 

உலக கோப்பைக்கான அணிக்கு தேவைப்படும் வீரர்களில் ஒருவர் ரிசர்வ் விக்கெட் கீப்பர். தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் ஒருவர் தேவை. அந்த இடத்திற்கு அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை காட்டிலும் ரிஷப் பண்ட்டிற்கே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது. 

தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி ஆடியபோதும், அவர் சிறந்த விக்கெட் கீப்பராக திகழும் நிலையிலும், அவரைவிட ரிஷப் பண்ட்டுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் ஆடிய ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பியதுடன் பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை. 

இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் உலக கோப்பைக்கான கதவு தினேஷ் கார்த்திக்கிற்கு சாத்தப்பட்டதாக கருதப்பட்டது. ரிஷப் பண்ட்டை பரிசோதிக்கும் விதமாக கடைசி 2 போட்டிகளில் ஆடவைக்கப்பட்டார். 

மொஹாலியில் நடந்த நான்காவது போட்டியில் கேட்ச், ஸ்டம்பிங் ஆகியவற்றை தவறவிட்டார் ரிஷப் பண்ட். பேட்ஸ்மேன் அடிக்கத் தவறிய பந்துகளையும் கூட தவறவிட்டு பவுண்டரிக்கு வழிவகுத்து கொடுத்தார். ஒரு விக்கெட் கீப்பர் இந்த லெட்சணத்தில் விக்கெட் கீப்பிங் செய்தால்,அது அணியின் வெற்றியை கடுமையாக பாதிக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. இவரை உலக கோப்பை அணியில் எடுத்தால், தோனி ஆடாத போட்டிகளில் அணியை தோல்விப்பாதைக்கு இவரே அழைத்து செல்லக்கூடிய அபாயம் உள்ளது. ரிஷப் பண்ட் இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. அதன்பின்னர் உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் ஆடவைக்கலாம் அல்லது தோனி ஓய்வுபெற்ற பிறகு வேறு வழியே இல்லாமல் இவரை ஆடவைத்து தேற்றலாம். 

ஆனால் இந்த உலக கோப்பைக்கு ஆடுவதற்கு அவர் தகுதி பெற்றுவிட்டாரா என்பது சந்தேகம்தான். பேட்டிங்கிலும் கவனத்தை ஈர்க்குமளவிற்கு ஒருநாள் போட்டிகளில் எதுவும் செய்யவில்லை. அதனால் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுப்பதே நல்லது. 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளருமான சைமன் கேடிச், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக இடம்பிடிப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியில் முன்னாள் கேப்டன் கங்குலி, ரிஷப் பண்ட்டை உலக கோப்பைக்கு தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் எதிர்காலம் ரிஷப் பண்ட் தான் என்றும் அந்த வகையில் ரிஷப் பண்ட்டையே தேர்வு செய்வதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார். 
 

click me!