இந்திய ஒருநாள் அணியில் ”தி கிரேட்” ராகுல் டிராவிட்டின் இடத்தை அவரால் மட்டும்தான் நிரப்ப முடியும்!!

By karthikeyan VFirst Published Mar 19, 2019, 12:23 PM IST
Highlights

இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் தடுப்புச்சுவர் ராகுல் டிராவிட் ஆற்றிய அரிய பணியை தற்போது இருக்கும் வீரர்களில் ஒருவரால் மட்டுமே நிரப்ப முடியும் என கங்குலி தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

ஓரளவிற்கு அணி உறுதி செய்யப்பட்டுவிட்டாலும், பேட்டிங் ஆர்டரில் முக்கியமான 4ம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 4ம் வரிசைக்கு ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தோனி உட்பட ஏராளமான வீரர்களை களமிறக்கி பரிசோதித்த இந்திய அணி, ஒருவழியாக ராயுடுவை உறுதி செய்தது. 

ராயுடுவும் ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய தொடர்களில் நன்றாக ஆடினார். இதையடுத்து ராயுடுதான் உலக கோப்பையில் நான்காம் வரிசையில் இறங்கப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், அண்மையில் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராயுடு சோபிக்கத்தவறினார். முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை. 3 போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். 

3 போட்டிகளில் சொதப்பியதால், கடைசி 2 போட்டிகளில் ராயுடு அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடுவின் நீக்கம், 4ம் வரிசைக்கு வேறு வீரரை இந்திய அணி தேடுகிறது என்ற தகவலை உணர்த்துவதாக அமைந்தது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் 4ம் வரிசை வீரர் உறுதி செய்யப்படாதது, இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

நான்காம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படாததால் பல முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கலுக்கு தங்களது பரிந்துரைகளை தெரிவித்துவருகின்றனர். 

பாண்டிங், கும்ப்ளே, ஹைடன், சஞ்சய் மஞ்சரேக்கர் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்தை தெரிவித்தனர். இவர்களில் கங்குலியின் பரிந்துரைதான் சற்று வித்தியாசமானது. டெஸ்ட் வீரராக முத்திரை குத்தப்பட்ட புஜாராவை நான்காம் வரிசையில் இறக்கலாம் என்று கங்குலி பரிந்துரைத்துள்ளார். டெஸ்ட் அணியின் அசைக்க முடியாத சக்தியாக திகழும் புஜாரா, வெறும் 5 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ஆனாலும் அவரால் இந்திய அணிக்கு, ஒருநாள் கிரிக்கெட்டில் டிராவிட் ஆற்றிய பணியை ஆற்றமுடியும் என கங்குலி வலுவாக நம்புகிறார். 

புஜாராவின் ஃபீல்டிங் ஒரு மைனஸ் தான் என்றாலும் ஒரு பேட்ஸ்மேனாக நான்காம் வரிசைக்கு சரியான வீரர் என்றும் இதுவரை இந்திய அணி அந்த வரிசையில் பரிசோதித்த வீரர்களை விட புஜாரா சிறந்தவர் தான் என்றும் கங்குலி அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்திய அணியை பல இக்கட்டான சூழல்களில் இருந்து மீட்டெடுத்து வெற்றியை தேடிக்கொடுத்தவர் டிராவிட். இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் டிராவிட், இந்திய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த பங்காற்றியிருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் டிராவிட் ஆற்றிய பணியை புஜாராவால்தான் ஆற்றமுடியும் என கங்குலி நம்புகிறார். 

click me!