2011 உலக கோப்பை ஃபைனலில் நான் சதத்தை தவறவிட்டதற்கு தோனி தான் காரணம்.. பரபரப்பை கிளப்பிய கம்பீர்

By karthikeyan VFirst Published Nov 18, 2019, 11:37 AM IST
Highlights

2011 உலக கோப்பை இறுதி போட்டியில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் கம்பீர். அந்த போட்டியில் 97 ரன்கள் அடித்து, அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை நோக்கி வீருநடை போடவைத்த கம்பீர், 97 ரன்களில் அவுட்டானார். 3 ரன்களில் சதத்தை இழந்ததற்கு தோனி தான் காரணம் என்கிற ரீதியாக கம்பீர் தெரிவித்துள்ளார். 

2011 உலக கோப்பையை இந்திய அணி வென்ற தருணத்தை எந்த கிரிக்கெட் ரசிகராலும் மறந்துவிட முடியாது. 1983ல் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்ற பின்னர், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்திய அணி கோப்பையை தூக்கியது. 

மும்பை வான்கடேவில் இந்தியா  மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த இறுதி போட்டியில், இந்திய அணிக்கு 275 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி. 275 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகிய இருவரது விக்கெட்டும் விரைவிலேயே விழுந்துவிட்டது. 

அதன்பின்னர் கண்டிப்பாக பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைத்து, பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயம் கம்பீர் மீது இருந்தது. அப்போதைய இளம் வீரரான விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தார் கம்பீர். கோலி அவுட்டானதும் தோனி களத்திற்கு வந்தார். தோனியுடனும் இணைந்து அபாரமாக ஆடிய கம்பீர், 97 ரன்களை குவித்து, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை நோக்கி வீருநடை போடவைத்தார். தோனி அதிரடியாக ஆடி வெற்றிகரமாக போட்டியை முடித்து வைத்திருந்தாலும், அதற்கு அடித்தளமிட்டு கொடுத்தவர் கம்பீர். கம்பீரின் இன்னிங்ஸ் மிக முக்கியமானது. 

ஆனால் 97 ரன்களில் கம்பீர் அவுட்டானதுதான் வருத்தமான விஷயம். நன்றாக ஆடிக்கொண்டிருந்த கம்பீர், திடீரென 97 ரன்களில் அவுட்டாகிவிட்டு சென்றார். ஃபைனலில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டு சென்றார். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு, தான் சதத்தை நழுவவிட்ட அந்த தருணம் குறித்தும் அதற்கான காரணம் குறித்தும் பகிர்ந்துள்ளார் கம்பீர். 

இதுகுறித்து பேசியுள்ள கவுதம் கம்பீர், நான் 97ல் அவுட்டானது குறித்து என்னிடம் அடிக்கடி கேட்கின்றனர். நான் எப்போதுமே எனது தனிப்பட்ட ஸ்கோர் குறித்து கவலைப்பட்டதேயில்லை. அதை கருத்தில் கொள்வதுமில்லை. அதுவும் ஃபைனலில் அந்த தருணத்தில், இலங்கை அணி நிர்ணயித்த இலக்கை விரட்டுவதில்தான் எனது முழு கவனமும் இருந்தது. 

அப்படியாக இலக்கை எட்டுவதில் மட்டுமே கவனமாக இருந்த சமயத்தில், ஒரு குறிப்பிட்ட ஓவர் முடிந்ததும், தோனி என்னிடம் வந்து பேசினார். எனது சதத்திற்கு இன்னும் 3 ரன்கள் மட்டுமே மீதமிருந்ததை நினைவூட்டி, முதலில் சதத்தை வெற்றிகரமாக அடித்துவிடு என்றார். தோனி என்னிடம் சதம் குறித்து நினைவூட்டியதும், எனது முழு கவனமும் சதத்தின் பக்கம் திரும்பிவிட்டது. அதுவே ஒருவிதமான அழுத்தத்தை அதிகரித்தது. நானும் அவுட்டாகிவிட்டேன்.

இலக்கை மட்டுமே கருத்தில்கொண்டு அதைநோக்கி ஆடியவரை நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருந்தேன். ஆனால் என்னுடைய சதத்தை பற்றி நினைக்க தொடங்கியதுமே விக்கெட்டை இழந்துவிட்டேன் என்று கம்பீர் தெரிவித்துள்ளார். 
 

click me!