அவங்க 2 பேரையும் விட இவருதான் செம ஃபார்ம்ல இருக்காரு.. இறக்கி பாருங்க.. உலக கோப்பைல சும்மா தெறிக்கவிடுவாப்ள!! காம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published May 14, 2019, 2:12 PM IST
Highlights

உலக கோப்பையில் யாரை நான்காம் வரிசையில் இறக்கலாம் என முன்னாள் அதிரடி வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. 

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு அடுத்தபடியாகவே இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக பார்க்கப்பட்ட ராயுடு, அண்மைக்காலமாக சொதப்பியதால் அவரை நீக்கிவிட்டு உலக கோப்பை அணியில் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார். 

நடப்பு ஃபார்மின் அடிப்படையிலும் விஜய் சங்கர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால், தேவைப்படும்போது பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் விளக்கமளித்திருந்தார். இந்திய அணியில் நான்காம் வரிசை சிக்கல் நீண்டகாலமாக இருந்துவருகிறது. யுவராஜ் சிங்கிற்கு அடுத்த அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்காக பல வீரர்கள் பரிசோதிக்கப்பட்டனர். 

பல சோதனை முயற்சிகளுக்கு பிறகு ராயுடு உறுதி செய்யப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நடந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களில் அருமையாக ஆடி உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். 

விஜய் சங்கர் மிடில் ஓவர்களில் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து சிங்கிள் ரோடேட் செய்வதுடன் அவ்வப்போது பெரிய ஷாட்டுகளை அடித்தும் ஆடுகிறார். எனவே விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலும் அணியில் இருப்பதால் அவரை இறக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும் நான்காம் வரிசையை இந்த வீரருக்கு என்று உறுதி செய்யாமல், சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை களமிறக்குவதற்கான திட்டத்தையும் இந்திய அணி வைத்துள்ளது. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையிலும் கூட நான்காம் வரிசை வீரர் குறித்து பல முன்னாள் வீரர்கள் இன்னும் கருத்து தெரிவித்துக்கொண்டு தான் உள்ளார்கள். கபில் தேவ், சந்தீப் பாட்டீல் போன்ற ஜாம்பவான்கள், எந்த பேட்டிங் வரிசையையும் இன்னாருக்குத்தான் என்று உறுதி செய்யாமல் சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை களமிறக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், நான்காம் வரிசை குறித்து காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். நான்காம் வரிசையில் யாரை இறக்குவது என்பதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் நான்காம் வரிசையில் யார் பேட்டிங் ஆடுகிறார் என்பது மிக மிக முக்கியம். என்னை பொறுத்தமட்டில் நான்காம் வரிசையில் கேஎல் ராகுலை களமிறக்கலாம். விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக்கை விட கேஎல் ராகுலே அந்த வரிசைக்கு சரியாக இருப்பார். ஐபிஎல்லிலும் சிறப்பாக ஆடி நல்ல ஃபார்மில் உள்ளார். அதனால் அதே ஃபார்மை உலக கோப்பையிலும் தொடர்வார் என்று காம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனால் ராகுலையே நான்காம் வரிசையில் ஆடவைக்கலாம் என்று காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!