இந்திய அணி வென்ற 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய யுவராஜ் சிங்கை கௌரவப்படுத்துவதற்கான ஐடியாவை பிசிசிஐக்கு வழங்கியுள்ளார் கவுதம் கம்பீர்.
இந்திய அணியில் 2000ம் ஆண்டில் அறிமுகமாகி, இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணியில் யுவராஜ் இடம்பெறவில்லை. இதையடுத்து அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றிலிருந்து ஓய்வு பெற்றார்.
2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டையும் இந்திய அணி வென்றபோது அந்த தொடர்களில் யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. அந்த 2 உலக கோப்பை தொடர்களிலுமே யுவராஜ் சிங் தான் தொடர் நாயகன் விருதை வென்றார்.
2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 2007 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்தார்.
இந்திய அணி வென்ற இரண்டு உலக கோப்பைகளிலும் முக்கிய பங்காற்றியவர் யுவராஜ் சிங். இந்திய அணியில் 17 ஆண்டுகள் ஆடி ஏராளமான வெற்றிகளை குவித்து கொடுத்தவர் யுவராஜ் சிங். இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டுக்கு யுவராஜ் சிங் அளித்த பங்களிப்பிற்காக அவரை கௌரவப்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று பிசிசிஐக்கு கவுதம் கம்பீர் தனது ஆலோசனையை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய கம்பீர், 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகிய இரண்டிலும் யுவராஜ் சிங் அபாரமான பங்காற்றினார். அவரை கௌரவப்படுத்தும் விதமாக அவரது ஜெர்சி எண் 12-க்கு ஓய்வளித்துவிடலாம். இனிமேல் அந்த எண்ணை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்தால், அதுவே யுவராஜ் சிங்கிற்கு அளிக்கும் மிகப்பெரிய கௌரவமாக இருக்கும் என கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.