இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரை எந்த அணி என்ன வித்தியாசத்தில் தொடரை வெல்லும் என்று இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் 3 பேர் கணித்துள்ளனர்.
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் ஆடிவருகிறது. கடைசியாக 2007ல் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது. அதன்பின்னர் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. 2014 மற்றும் 2018 ஆகிய 2 சுற்றுப்பயணங்களிலும் இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது.
எனவே இந்த முறை டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்தில் ஆடிவரும் இந்திய அணி, முன்னெப்போதையும் விட சிறந்த பவுலிங் யூனிட்டுடன் சென்றிருப்பதால் இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
கடந்த 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்கி நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி முகத்தில் உள்ளது. இதற்கிடையே, இந்த தொடரின் முடிவு எப்படி இருக்கும் என்ற இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மைக்கேல் வான், அலெஸ்டர் குக் மற்றும் க்ரேம் ஸ்வான் ஆகிய மூவரின் கணிப்பை பார்ப்போம்.
இந்திய அணி 3-1 என இந்த டெஸ்ட் தொடரை வெல்லும் என்று மைக்கேல் வான் மற்றும் க்ரேம் ஸ்வான் ஆகிய இருவரும் கணித்துள்ளனர். அதற்கு அப்படியே நேர்மாறாக, இங்கிலாந்து அணி 3-1 என வெல்லும் என்று அலெஸ்டர் குக் கணித்துள்ளார்.