
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.
முதல் 2 போட்டிகளிலும் படுமட்டமாக விளையாடிய இங்கிலாந்து அணி, மெல்போர்னில் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்துவரும் பாக்ஸிங் டே டெஸ்ட்டிலும் படுமட்டமாகவே பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 185 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே அரைசதம் அடித்தார். அவரும் 50 ரன்னுக்கே ஆட்டமிழந்தார். ஹசீப் ஹமீத், ஜாக் க்ராவ்லி, பென் ஸ்டோக்ஸ், பட்லர், பேர்ஸ்டோ என அனைவருமே ஏமாற்ற, 185 ரன்களுக்கே சுருண்டது இங்கிலாந்து அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் மட்டுமே அரைசதம் அடித்தார். ஹாரிஸ் 76 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அரைசதம் அடிக்கவில்லை என்றாலும், மிக மோசமாக ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்காமல் பங்களிப்பு செய்தனர். வார்னர் (38), டிராவிஸ் ஹெட் (27), கேமரூன் க்ரீன் (17), அலெக்ஸ் கேரி (19), பாட் கம்மின்ஸ் (21), மிட்செல் ஸ்டார்க் (24) ஆகியோர் சிறு சிறு பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 267 ரன்கள் அடித்தது.
82 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2ம் நாள் ஆட்டமான இன்றைய ஆட்டத்தின் 3வது செசனில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒருமுறை படுமோசமாக சொதப்பிவருகின்றனர். ஜாக் க்ராவ்லி 5 ரன்னில் மிட்செல் ஸ்டார்க்கின் பந்தில் ஆட்டமிழக்க, ஹசீப் ஹமீத் 7 ரன்னில் போலந்தின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த டேவிட் மலான் மற்றும் ஜாக் லீச் ஆகிய இருவருமே ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினர். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மோசமாக பேட்டிங் ஆடும் அதேவேளையில், இங்கிலாந்து பவுலர்கள் அபாரமாக பந்துவீசிவருகின்றனர்.
22 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி. ஜோ ரூட்டும் பென் ஸ்டோக்ஸும் களத்தில் இருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 2ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் அடித்துள்ளது. இங்கிலாந்து அணி இன்னும் 51 ரன்கள் பின் தங்கியிருக்கும் நிலையில், கையில் இன்னும் 6 விக்கெட் மட்டுமே இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு, இந்த 51 ரன்னுக்கு மேல் எத்தனை ரன் அடிக்கிறார்களோ, அதுதான் ஆஸ்திரேலியாவிற்கு டார்கெட்டாக இருக்கும். எனவே அதிகபட்சம் 100-150 ரன்களுக்கு மேல் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பே இல்லை. எனவே இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.