பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 20 ஓவரில் 200 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 201 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று லீட்ஸில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஒயின் மோர்கன் ஓய்வு எடுத்துக்கொண்டதால், ஜோஸ் பட்லர் கேப்டன்சி பொறுப்பை ஏற்று செயல்படுகிறார். முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, 19.5 ஓவரில் 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 10 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 39 பந்தில் 59 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழந்தார். டேவிட் மலான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஆனால் அதிரடியாக ஆடிய மொயின் அலி 16 பந்தில் 36 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 13 ரன்னிலும் லிவிங்ஸ்டோன் 38 ரன்னிலும் அவுட்டாகினர். அதன்பின்னர் டெய்லெண்டர்கள் அனைவருமே அடுத்தடுத்து சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 19.5 ஓவரில் 200 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. பின்வரிசை வீரர்கள் ஓரளவிற்கு நன்றாக ஆடியிருந்தால் இன்னும் பெரிய ஸ்கோரை அடித்திருக்கும் இங்கிலாந்து அணி.
இதையடுத்து 201 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டிவருகிறது.