
சாலை பாதுகாப்பு டி20 தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு இந்த தொடரில் ஆடிவருகின்றனர்.
ராய்ப்பூரில் இன்று இங்கிலாந்து மற்றும் வங்கதேச லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி, வங்கதேசத்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச லெஜண்ட்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் படுமோசமாக சொதப்பினர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மஷூத் அதிகபட்சமாக 31 ரன்னும் ரஹ்மான் 30 ரன்னும் அடித்தனர். வங்கதேச லெஜண்ட்ஸ் அணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் 113 ரன்கள் மட்டுமே அடித்தது.
114 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான கெவின் பீட்டர்சன் அதிரடியாக ஆடி 17 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 42 ரன்களை விரைவில் சேர்த்துக்கொடுக்க, 14வது ஓவரிலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணி. ஆட்டநாயகனாக கெவின் பீட்டர்சன் தேர்வு செய்யப்பட்டார்.