
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளார். இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நாளை தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிதான் விராட் கோலியின் 100வது டெஸ்ட். 100வது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு முன்பாக கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார் கோலி.
2014ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்திவந்த விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 40 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் முடிவை பெறும் டிரெண்டை தொடங்கிவைத்ததே விராட் கோலி தான் எனலாம். போட்டியை டிரா செய்ய விரும்பாத கோலி, வெற்றிக்காகத்தான் போராடுவார். வெற்றி அல்லது தோல்வி என டெஸ்ட்டில் முடிவை பெற விரும்பிய கோலி, அதில் பெரும்பாலும் வெற்றியைத்தான் பெற்றார்.
ஆஸ்திரேலிய மண்ணில் 2018-2019ல் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. இங்கிலாந்திலும் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளிலும் அபாரமாக விளையாடியது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தபின்னர் திடீரென டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகினார் விராட் கோலி. இதையடுத்து, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படவுள்ளார். ரோஹித்தின் கேப்டன்சியின் கீழ் கோலி ஆடவுள்ளார்.
விராட் கோலி அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடவிருப்பதையொட்டி, முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் வாழ்த்து கூறிவருகின்றனர். அந்தவகையில், கோலியின் கேப்டன்சியில் தரமான சம்பவம் என்னவென்று தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், விராட் கோலி இந்திய கிரிக்கெட்டிற்கு மட்டுமல்லாது, உலக கிரிக்கெட்டுக்கே பாரம்பரியத்தை விட்டுச்சென்றிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாக ஆடியிருக்கிறது. விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சியை உலகமே வியந்து பார்த்திருக்கிறது. ஃபிட்னெஸில் அவர் நிர்ணயித்த தரம் மிக உயர்வானது. வீரர்களின் ஃபிட்னெஸ் உயர்ந்ததால் தான் ஃபீல்டிங்கில் இந்திய அணியின் தரம் அதிகரித்தது.
கோலியின் கேப்டன்சியில் தரமான சம்பவம் என்னவென்றால், என்னை பொறுத்தமட்டில் 2018 ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணம் தான். புனே டெஸ்ட்டில் ஸ்பின்னிற்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. இது பெரும் அதிர்ச்சியளித்தது. ஆனால் அதற்கடுத்த போட்டியில் பெங்களூருவில் இந்திய அணி ஆடிய விதம் அபாரமானது என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.