4ம் வரிசைக்கு புதுசா யாரும் தேவையில்ல.. அவரையே இறக்கலாம்!!

By karthikeyan VFirst Published Mar 16, 2019, 4:42 PM IST
Highlights

இந்திய அணியின் முடிவுறாத சிக்கலான 4ம் வரிசை பேட்டிங் குறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

நான்காம் வரிசை தான் இன்னும் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த இடத்தில் இறக்கிவிட்டு பரிசோதிக்கப்பட்டது. நீண்ட தேடுதல் படலத்திற்கு பிறகு நான்காம் வரிசை வீரராக தேர்வு செய்யப்பட்ட ராயுடு, ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடியதை இந்திய அணி நிர்வாகம் நிம்மதி பெருமூச்சு விட்டது. 

ஆனால் அதற்கு ராயுடுவே ஆப்பு வைத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் படுமோசமாக சொதப்பினார். அவரது ஆட்டத்தில், அவர் தன்னம்பிக்கையுடன் இல்லாதது அப்பட்டமாக தெரிந்தது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், ராயுடு படுமோசமாக சொதப்பியதும் தன்னம்பிக்கையில்லாமல் ஆடியதும் இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றம். 

ஆஸ்திரேலிய தொடரில் முதல் மூன்று போட்டிகளில் ஆடிய ராயுடு, வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து நான்காவது போட்டியில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் சரியாக ஆடாதது மட்டுமல்லாமல் அவரது ஃபீல்டிங்கும் சரியில்லை. ராயுடு சொதப்பியதால் இந்திய அணியின் நான்காம் இடம் இன்னும் இழுபறியிலேயே உள்ளது. 

இந்நிலையில், பல முன்னாள் ஜாம்பவான்கள் தங்களது கருத்துகளையும் பரிந்துரைகளையும் தெரிவித்துவருகின்றனர். முன்னாள் கேப்டன் கங்குலி, யாரும் எதிர்பாராத வகையில் புஜாராவின் பெயரை பரிந்துரைத்தார். முன்னாள் சுழல் ஜாம்பவான் கும்ப்ளே, தோனியையே நான்காம் வரிசையில் இறக்கலாம் என ஆலோசனை தெரிவித்தார். கேஎல் ராகுலை நான்காம் வரிசையில் இறக்கலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிரடியாக கருத்து தெரிவித்தார்.

ஆனால் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஏற்கனவே ஒரு திட்டத்தை கூறியிருந்தார். இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களும் வலுவாக இருப்பதால் அவர்களை, சூழலுக்கு ஏற்ற வகையில், தேவைப்பட்டால் பிரிக்கலாம். போட்டியின் சூழலுக்கு ஏற்றவாறு கோலியை நான்காம் வரிசையில் இறக்கலாம். உலக கோப்பை போன்ற பெரிய தொடருக்கு சூழலுக்கு ஏற்றவகையில் பேட்டிங் ஆர்டரை மாற்ற நேரிடும். அதுகுறித்து விவாதித்து கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

ரவி சாஸ்திரியின் இந்த கருத்துக்கு பல முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் 3 வீரர்கள் சிறப்பாக பேட்டிங் ஆடிக்கொண்டிருப்பதுதான் இந்திய அணியின் மிகப்பெரிய பலம். அவர்களால்தான் இந்திய அணி வெற்றியும் பெற்று கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில், கோலியை நான்காம் வரிசையில் இறக்க வேண்டிய அவசியமில்லை என்று பல முன்னாள் வீரர்கள் அதிரடியாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

ஆனால் சாஸ்திரி சொன்னதுதான் சரிதான் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். தொடக்கத்திலேயே விக்கெட் விழுந்துவிடும் பட்சத்தில் அணியின் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியை 3ம் வரிசையில் இறக்காமல் நான்காம் வரிசையில் இறக்குவதுதான் சரி என்று தெரிவித்துள்ளார்.
 

click me!