பாண்டிங்கின் ஆஸ்திரேலிய அணி மீது சைக்கலாஜிகல் போர் தொடுத்த தோனி..! வேற லெவல் சம்பவம்

By karthikeyan VFirst Published Aug 15, 2020, 10:41 PM IST
Highlights

தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவரது கேப்டன்சி கெரியரில் அவர் செய்த நிறைய சம்பவங்களில் தரமான ஒரு சம்பவத்தை பற்றி பார்ப்போம்.
 

2004ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடிய தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். இந்திய அணிக்காக பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்சி என அனைத்துவிதத்திலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர். இந்திய அணிக்கு 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன். 

அதிரடியான பேட்டிங், அபாரமான விக்கெட் கீப்பிங், மிகச்சிறப்பான கேப்டன்சி என ஒரு முழுமையான கிரிக்கெட்டரான தோனி, இன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். தோனி ஒரு மிகச்சிறந்த கேப்டன் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது கேப்டன்சியை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே தோனியின் கேப்டன்சியை பற்றி தெரியும்.

இந்நிலையில், அவர் தனது கேப்டன்சியின் ஆரம்பக்கட்டத்தில் செய்த தரமான சம்பவத்தை பற்றி பார்ப்போம். அதுவும் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக செய்த சம்பவம்.

பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2002லிருந்து சுமார் 7 முதல் 8 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத சக்தியாக கிரிக்கெட் உலகில் திகழ்ந்தது. பாண்டிங் தலைமையில் 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக இரண்டு உலக கோப்பைகளை ஆஸ்திரேலிய அணி வென்றது. 

எந்த அணியுடன் மோதினாலும் வெற்றி, எல்லா தொடரிலும் வெற்றி, தரவரிசையில் முதலிடம் என அந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தான் ஆதிக்கம் செலுத்தியது. பாண்டிங் தலைமையிலான அந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்கிய அணி அது. எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதே அந்த அணியின் ஒற்றை இலக்கு.

எந்த அணியாலும் தங்களை வீழ்த்த முடியாது என்ற ஆணவத்துடனும் அதற்கான திறமையுடனும் வலம்வந்த ஆஸ்திரேலிய அணிக்கு அப்போதைய இந்திய அணியின் இளம் கேப்டனான தோனி, ஆஸ்திரேலியா வீழ்த்த முடியாத அணி அல்ல என்பதை அந்த அணிக்கு சவுக்கடி கொடுத்து சுட்டிக்காட்டினார். 

2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் பேங்க் தொடரின் மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி இலக்கை விரட்டியபோது, வெற்றிக்கு இன்னும் 10 ரன்களே தேவை என்ற நிலையில், களத்தில் தோனியும் ரோஹித்தும் இருந்தனர். அப்போது கையுறை கேட்பது போன்று ஓய்வறைக்கு ஒரு செய்தி அனுப்பினார். நாம் வெற்றி பெற்றதும் அதை பெரியளவில் கொண்டாட வேண்டாம் என்று ஓய்வறைக்கு செய்தி அனுப்பினார். எதிர்முனையில் ஆடிய ரோஹித்திடமும் அதை தெரிவித்துவிட்டார். 

வெற்றி பெற்றதும் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதை கொண்டாடவில்லை. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது என்பது பெரிய விஷயம் அல்ல என்பதையும் இந்த வெற்றி அதிர்ஷ்டத்திலோ எதிர்பாராத விதமாகவோ கிடைத்த வெற்றி அல்ல என்பதையும் அந்த அணிக்கு உணர்த்தினார். வலுவான அணியான நமக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டு அதை இந்திய அணி கொண்டாடவில்லை என்பதை ஆஸ்திரேலிய அணி உணர வேண்டும் என்பதே தோனியின் எண்ணம். காமன்வெல்த் பேங்க் தொடரையும் இந்திய அணியே வென்றது.
 

click me!