ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவருக்கும் மாற்று வீரர்களை அறிவித்துள்ளது டெல்லி கேபிடள்ஸ் அணி.
ஐபிஎல் 14வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த சீசனில் ஃபைனலுக்கு முன்னேறிய டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தோள்பட்டை காயம் காரணமாக ஐபிஎல் 14வது சீசனிலிருந்து விலகினார்.
ஸ்பின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல் கொரோனா காரணமாக முதல் சில போட்டிகளில் ஆடமுடியாது. இந்நிலையில், அவர்கள் இருவருக்குமான மாற்று வீரர்களை டெல்லி கேபிடள்ஸ் அணி அறிவித்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாததால் இந்த சீசனில் டெல்லி அணியை ரிஷப் பண்ட் கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார். இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக அனிருதா ஜோஷி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அனிருதா ஜோஷி, ஆஃப் ஸ்பின்னும் வீசக்கூடியவர்.
அக்ஸர் படேல் இந்த சீசனின் இடையே வந்துவிடுவார் என்றாலும், அதுவரை அவருக்கு மாற்று வீரராக ஷாம்ஸ் முலானி சேர்க்கப்பட்டுள்ளார். அக்ஸர் படேலை போன்றே இடது கை ஸ்பின்னரான முலானி, இடது கை பேட்ஸ்மேன்.