IND vs SL: தசுன் ஷனாகாவின் போராட்ட சதம் வீண்..! முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 10, 2023, 9:46 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

இந்தியா - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று கவுகாத்தியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, துனித் வெல்லாலகே, கசுன் ரஜிதா, தில்ஷான் மதுஷங்கா.

ODI-யில் 45வது சதமடித்து சாதனை படைத்த கோலி! மெகா ஸ்கோர் அடித்து இலங்கைக்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 19.4 ஓவரில் 143 ரன்களை குவித்து கொடுத்தனர். கில் 60 பந்தில் 70 ரன்களுக்கும், அவரைத்தொடர்ந்து ரோஹித் 67 பந்தில் 83 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா நன்றாக  செட்டில் ஆனதால் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 83 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் (28), கேஎல் ராகுல் (39) ஆகியோர் சிறிய பங்களிப்பு செய்து ஆட்டமிழந்தனர். அவர்கள் ஆட்டமிழந்தாலும், 3ம் வரிசையில் இறங்கி நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடிய விராட் கோலி சதமடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 45வது சதத்தை விளாசி சாதனை படைத்தார்.  விராட் கோலி 87 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விராட் கோலியின் அபார சதம் மற்றும் ரோஹித் (83), கில்லின்(70) அரைசதங்களால் 50 ஓவரில் 373 ரன்களை குவித்தது.

374 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசாங்கா ஒருமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆட, மறுமுனையில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ(5), குசால் மெண்டிஸ்(0), சாரித் அசலங்கா(23), தனஞ்செயா டி சில்வா(47) ஆகிய வீரர்கள் மறுமுனையில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்த பதும் நிசாங்கா 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் கதவை ஓங்கி தட்டும் பிரித்வி ஷா..! ரஞ்சி போட்டியில் ஒரே நாளில் 240 ரன்களை குவித்து சாதனை

அதன்பின்னர் மறுபடியும் வனிந்து ஹசங்கா(16), வெல்லாலகே(0), சாமிகா கருணரத்னே(14) ஆகியோர் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய இலங்கை கேப்டன் தசுன் ஷனாகா சதமடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி கடைசிவரை களத்தில் நின்று இலக்கை விரட்டிய தசுன் ஷனாகா 88 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 108 ரன்களை குவித்தார். 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் அடித்து தோல்வியை தழுவியது இலங்கைஅணி.

67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

click me!