
இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் தனுஷ்கா குணதிலகா. பேட்டிங் ஆல்ரவுண்டரான இவர், இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 8 டெஸ்ட், 47 ஒருநாள் மற்றும் 46 டி20 போட்டிகளில் ஆடி 2500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். டி20 உலக கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பெற்று ஆஸ்திரேலியா சென்ற அவர், காயம் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்து விலகினார். ஆனால் அவர் இலங்கைக்கு திரும்பாமல் ஆஸ்திரேலியாவிலேயே இருந்தார்.
இதற்கிடையே, 29 வயது இளம்பெண்ணுடன் இண்டர்நெட் வழியாக பழகிய தனுஷ்கா குணதிலகா அந்த பெண்ணை ஒரு வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனது அனுமதியின்றி குணதிலகா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நியூ சௌத் வேல்ஸ் போலீஸில் புகார் அளித்ததையடுத்து, குணதிலகாவை போலீஸார் கைது செய்தனர்.
பாலியல் வழக்கில் சிக்கிய குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்துள்ளது. அவர் எந்தவிதமான கிரிக்கெட்டிலும் ஆடமுடியாத படி சஸ்பெண்ட் செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு, இது உண்மை என நிரூபனமானால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தனுஷ்கா குணதிலகா காணொளி காட்சி மூலம் சிட்னி டவுனிங் செண்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தனுஷ்கா குணதிலகாவிற்கு ஜாமீன் கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் பாலியல் வன்கொடுமை வழக்கில் குணதிலகாவிற்கு ஜாமீன் அளிக்க மறுத்த நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டது.
இலங்கை அணியில் திறமையான இளம் வீரர்கள் பலர் வந்துவிட்ட நிலையில், இலங்கை அணி வலுவான அணியாக செட்டாகி கொண்டிருக்கிறது. எனவே இப்படியொரு மோசமான வழக்கில் சிக்கிய தனுஷ்கா குணதிலகாவிற்கு இனிமேல் இலங்கை அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அவரது கிரிக்கெட் கெரியர் இத்துடன் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது எனலாம்.