
ஐபிஎல் 15வது சீசன் தொடங்குவதற்கு முன் சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து தோனி விலகியதால் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளை தழுவியது. கேப்டன்சி அழுத்தம் ஜடேஜாவின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய செயல்பாடுகளையும் பாதித்தது.
ஜடேஜா பெயரளவில் கேப்டனாக இருந்தாலும், களத்தில் தோனி தான் கேப்டனாக செயல்பட்டார். கேப்டனாக இருந்தாலும் தன்னால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; ஆனால் தோல்விக்கு மட்டும் பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது என்ற ஆதங்கமும் இயலாமையும் தான் ஜடேஜா மீதான அழுத்தத்தை அதிகரித்தது. அதுதான் அவரது ஆட்டம் பாதிக்கப்படவும் காரணம்.
இதையடுத்து கேப்டன்சியிலிருந்து விலகினார் ஜடேஜா. மீண்டும் கேப்டன்சியை ஏற்ற தோனி, ஜடேஜாவால் கேப்டன்சி அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை என்றார். அதன்பின்னர் காயத்தால் கடந்த போட்டியில் ஆடாத ஜடேஜா, இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகுவதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்தது.
இந்நிலையில், ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துள்ளது சிஎஸ்கே. சிஎஸ்கே அணியின் இந்த செயல்பாடு பல்வேறு சந்தேகங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
தன்னை கேப்டனாக சுதந்திரமாக செயல்பட விடாததால் சிஎஸ்கே அணி மீது ஜடேஜா அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால் இருதரப்புக்கும் இடையே மனக்கசப்பு இருந்ததாகவும் பேசப்படுகிறது. ஜடேஜாவை அசிங்கப்படுத்தி அணியில் இருந்து ஓரங்கட்டிவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர்.