டி20 உலகக்கோப்பை வெற்றி முதல் ஐபிஎல் ஏலம் வரை; இந்திய கிரிக்கெட் 2024 ஒரு ரீகேப்

Published : Dec 11, 2024, 08:28 PM IST
டி20 உலகக்கோப்பை வெற்றி முதல் ஐபிஎல் ஏலம் வரை; இந்திய கிரிக்கெட் 2024 ஒரு ரீகேப்

சுருக்கம்

Cricket Year Ender 2024 : டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய சாதனையாகும்.

2024-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த வருடம் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது முதல் ஆஸ்திரேலியாவை பெர்த் மைதானத்தில் முதன்முறையாக வீழ்த்தியது வரை பல்வேறு சாதனைகளை இந்திய கிரிக்கெட் அணி நிகழ்த்தி உள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

உலகக் கோப்பை வெற்றி

டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வென்றது ரசிகர்களை உச்சகட்ட உற்சாகத்திற்கு கொண்டு சென்றது. முந்தைய ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இழந்த ரோகித்தும் அவரது அணியும் இந்த முறை கோப்பையை கைப்பற்றினர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி உறுதி என்று எண்ணிய இடத்தில் இருந்து கடைசி ஐந்து ஓவர்களில் அற்புதமான பந்துவீச்சு மூலம் இந்தியா வெற்றி பெற்றது. ஜஸ்பிரித் பும்ராவின் மாயாஜால பந்துவீச்சு, ஹர்திக் பாண்டியாவின் ஆல்-ரவுண்டர் திறமை, சூர்யகுமார் யாதவின் அசாத்திய கேட்ச் ஆகியவை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும். 

ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள்

டி20 உலகக் கோப்பை வெற்றியுடன், இந்திய கிரிக்கெட் மூன்று ஜாம்பவான்களின் விடைபெறுதலுக்கு சாட்சியாக இருந்தது. கேப்டன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக ஓய்வு பெற்றார். இரண்டாவது இடத்தில் இருந்த விராட் கோலியும் ஓய்வு பெற்றார். இந்தியாவின் சிறந்த சுழல் ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜாவும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

புதிய கேப்டன்

ரோகித் சர்மாவின் வாரிசாக ஹர்திக் பாண்டியா கேப்டனாவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், பிசிசிஐ சூர்யகுமார் யாதவை புதிய கேப்டனாக அறிவித்தது. ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளை வீழ்த்தி சூர்யகுமார் தனது திறமையை நிரூபித்தார்.

ஐபிஎல் ஏலம்

இந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் ஏலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. 26.75 கோடிக்கு ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் அணி வாங்கிய சில நிமிடங்களிலேயே, ரிஷப் பந்தை 27 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பந்த் பெற்றார். பல வீரர்கள் அணி மாறினர். கே.எல். ராகுல் லக்னோவை விட்டு டெல்லிக்கும், ரிஷப் பந்த் டெல்லியை விட்டு லக்னோவிற்கும், ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தாவை விட்டு பஞ்சாபிற்கும் சென்றனர். 23 கோடிக்கு வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி தக்கவைத்துக் கொண்டது.

டெஸ்ட் தொடர் தோல்வி

உலகக் கோப்பை வெற்றியின் மகிழ்ச்சியில் இருந்த, இந்திய ரசிகர்கள் மறக்க விரும்பும் தொடராக நியூசிலாந்து டெஸ்ட் தொடர் அமைந்தது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சொந்த மண்ணில் நடந்த இந்தத் தொடரை இந்தியா 3-0 என வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து 3-0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து அதிர்ச்சி அளித்தது. முந்தைய தொடரில் இலங்கையிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து, இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் தொடரை இழந்தது மட்டுமல்லாமல், முதல் முறையாக ஒயிட் வாஷ் ஆகி மோசமான சாதனையை ரோகித் தலைமையிலான இந்திய அணி படைத்தது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup Semi Final: இங்கிலாந்தை சிதறடித்த இந்தியா.. 254 ரன்கள் இலக்கு..!
212+ ஸ்ட்ரைக் ரேட்.. ஜஸ்ட் மிஸ்ல் சதத்தை தவறவிட்ட சஞ்சு சாம்சன்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா