இந்திய அணி கண்டிப்பா எங்க நாட்டுக்கு வந்து கிரிக்கெட் ஆடும்..! கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா நம்பிக்கை

By karthikeyan VFirst Published Nov 28, 2021, 6:26 PM IST
Highlights

கொரோனா புதிய வகை வைரஸ் தென்னாப்பிரிக்காவில் அதிவேகமாக பரவிவருவதால், இந்திய அணி திட்டமிட்டபடி தென்னாப்பிரிக்காவிற்கு செல்லுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இந்திய அணி கண்டிப்பாக தென்னாப்பிரிக்காவிற்கு வரும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரிய சி.இ.ஓ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடிவருகிறது. இந்தியாவில் நடந்துவரும் கிரிக்கெட் தொடரில் டி20 தொடர் முடிந்துவிட்ட நிலையில், டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 3 முதல் 7 வரை மும்பை வான்கடேவில் நடக்கவுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை முடித்துவிட்டு இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்வதாக திட்டமிடப்பட்டுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 17ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் கலந்துகொள்வதற்காக, டிசம்பர் 7ம் தேதி நியூசிலாந்து தொடரை முடித்துவிட்டு, 8ம் தேதியே இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்வதாக இருந்தது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் புதிய வகை வைரஸ் அதிவேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் டெல்டா வைரஸை விட வேகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். உலக சுகாதார நிறுவனமும் இந்த வைரஸ் பரவலை உன்னிப்பாக கவனித்துவருகிறது. 

எனவே இந்த வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்வது, வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்பதால் இந்த விஷயத்தில் இந்திய அரசுதான் முடிவெடுக்கும் என்றும், அதற்கேற்ப பிசிசிஐ செயல்படும் என்றும் தகவல் வெளியானது.

ஆனால் பிசிசிஐ இந்த சுற்றுப்பயணத்தில் உறுதியாக இருப்பதால், இந்திய அணி கண்டிப்பாக தென்னாப்பிரிக்காவிற்கு வந்து கிரிக்கெட் தொடரில் ஆடும் என்றும், பார்வையாளர்களை அனுமதிப்பது மட்டுமே சந்தேகம் என்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் சி.இ.ஓ தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஆடிவரும் இந்தியா ஏ அணி, வைரஸ் பரவலின் காரணமாக அந்த தொடரிலிருந்து பின் வாங்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் தங்கி கிரிக்கெட் தொடரில் ஆடிதான் வருகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் பிசிசிஐ உறுதியாக இருப்பதாகவும், அந்த சுற்றுப்பயண திட்டத்திலிருந்து பிசிசிஐ பின்வாங்கவில்லை என்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா சி.இ.ஓ தெரிவித்துள்ளார். 
 

click me!